
அதிகாரத்தை பயன்படுத்தி நாட்டை கட்டியெழுப்ப முடியாவிட்டால் எனது பதவியை தூக்கியெறிந்து வெளியேறத் தயார். அதைவிடுத்து நாட்டின் எதிர்காலத்தை ஆபத்தின் பொறிக்குள் தள்ளிவிட்டு அதிகாரத்தை பாதுகாத்துக் கொள்ளும் எண்ணம் எனக்கு கிடையாது என நேற்று பாராளுமன்றத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
தொழிற்சங்கங்களுடனான பேச்சுவார்த்தைகளின் போது சாதகமான தீர்வுகளை நாம் வழங்கியுள்ளோம். எனவே உழைக்கும் வர்க்கத்தினர் நாட்டை கட்டியெழுப்ப எம்மோடு ஒன்றிணைய வேண்டுமென்றும் பிரதமர் அழைப்பு விடுத்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை தொழிற்சங்கங்களுடனான பேச்சுவார்த்தைகள் தொடர்பில் விசேட கூற்று ஒன்றை முன்வைத்து உரையாற்றுகையிலேயே போதே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
பிரதமர் சபையில் தொடர்ந்து உரையாற்றுகையில்,
தேசிய தொழிற்சங்க முன்னணியின் சமன் ரத்னப் பிரிய உட்பட பஸ் உரிமையாளர் சங்கத்தின் கெமுனு விஜேரத்ன ஆகியோரின் வேண்டுகோளுக்கிணங்க சனிக்கிழமை பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன.இப்பேச்சுக்களின் விபரங்கள் ஜனாதிபதிக்கும் அறிவிக்கப்பட்டன. நாட்டின் எதிர்காலத்தை பாதுகாத்து எதிர்கால சந்ததியினரின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதே எமது நோக்கமாகும். ஜனவரி 8 புரட்சியும் இதற்கே ஏற்படுத்தப்பட்டது.
மக்களுக்கு சேவை செய்வதற்கே நாம் ஆட்சிக்கு வந்தோம். இதனையே மக்கள் எம்மிடமிருந்து எதிர்பார்க்கின்றனர். நாடு தொடர்பில் தீர்மானங்களை எடுக்கும் போது முதலாவது இரண்டாவது மூன்றாவது அனைத்து சந்தர்ப்பங்களிலும் நாட்டை பற்றியே சிந்திப்போம்.ஐக்கிய தேசிய கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து நாட்டின் எதிர்காலத்தை கருதியே ஆட்சியை உருவாக்கினோம். நாட்டின் முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக் கொடுத்து நாட்டை கட்டியெழுப்புவதற்காக இதனை செய்தோம்.
எனது அரசியல் வாழ்க்கையில் அதிகாரத்தில் இருந்துள்ளேன். அதிகாரம் இல்லாமல் எதிர்க்கட்சியிலும் இருந்துள்ளேன். நான் நாட்டை கட்டியெழுப்புவதற்காகவே அதிகாரத்தை பயன்படுத்தினேன். தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலை முன்னெடுப்பதற்காக அல்ல.அதிகாரத்தை பயன்படுத்தி நாட்டை கட்டியெழுப்ப முடியாவிட்டால் அதிகாரத்தை தூக்கியெறிந்துவிட்டு வெளியேறத் தயார்.
நாட்டை பொறிக்குள் தள்ளிவிட்டு மற்றும் நாட்டின் எதிர்காலத்தை ஆபத்தில் தள்ளிவிட்டு அதிகாரத்தை பாதுகாத்துக் கொள்ளும் கொள்கை எனக்கு கிடையாது.எனவே அதிகாரத்தை பாதுகாத்துக் கொள்வதற்காக பிரபல்யமான தீர்மானங்களை மட்டும் மேற்கொள்வதற்காக நாம் நடவடிக்கைகளை எடுக்க மாட்டோம். எனவே வருடா வருடம் ஓய்வூதியம் செலுத்துவதற்காக வரவு செலவுத் திட்டத்தில் அதிக நிதி ஒதுக்கப்பட வேண்டியுள்ளது. அரச ஊழியர்களையும் அவர்களது ஓய்வூதியத்தையும் நாம் பாதுகாப்போம். ராஜபக் ஷ ஆட்சிக்காலத்தில் அரசியல் பிரபல்யத்திற்காக எதுவிதமான அடித்தளமுமில்லாது அரச சேவைக்கு ஆட்கள் இணைத்துக் கொள்ளப்பட்டனர். ஆனால் அவர்களுக்கான ஓய்வூதியத்திற்கான ஒதுக்கம் இருக்கவில்லை.
இவ்வாறு அரச ஊழியர்களின் எதிர்காலத்துடன் கடந்த ஆட்சியாளர்கள் விளையாடியுள்ளனர். எமது நல்லாட்சியில் அரச ஊழியர்களின் எதிர்காலத்தை பலிக்கடாவாக்கி அரசியல் இலாபங்களை தேடமாட்டோம்.நாட்டு மக்களின் எதிர்காலத்தை அடகு வைத்து பிரபல்யத்துக்காக அரசியல் செய்யமாட்டோம். நாம் மேலும் பல தசாப்தங்களை இலக்கு வைத்தே திட்டங்களை முன்னெடுக்கின்றோம்.
நாட்டின் எதிர்காலம் கருதி பிரபல்யம் இல்லாத தீர்மானங்களை எடுப்பதில் நாம் பின்னிற்க மாட்டோம். நாம் எடுக்கும் சில தீர்மானங்கள் நிகழ்காலத்தில் பிரபல்யமில்லாதவையாக இருக்கலாம். விமர்சனங்களுக்கு உள்ளாகலாம். ஆனால் எதிர்காலத்தில் எப்போதாவது ஒரு தினத்தில் நாம் எடுத்த தீர்மானம் சரியானதென்பதை எதிர்கால சந்ததியினர் சொல்வார்கள்.
ஊழியர் சேமலாப நிதி, ஊழியர் நம்பிக்கை நிதியம் தொடர்பாகவும் பேசினோம். இந்நிதியங்களை முழுமையாக பாதுகாப்போம். எவருக்கும் கொள்ளையடிக்க இடமளிக்கமாட்டோம். அதற்கேற்ற விதத்தில் நிர்வாகத் திட்டமொன்றை ஏற்படுத்துவோம். ஆனால் இது தொடர்பில் தொழிற்சங்கங்களுடன் பேசியே இறுதி முடிவு எடுப்போம்.
வயது முதிர்ந்தோர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு, வாழும் வயதெல்லை அதிகரிப்பு என்பனவற்றால் ஓய்வூதிய கொடுப்பனவை வழங்குவது மேலும் நெருக்கடியாகும்.தற்போதைய ஓய்வூதியத் திட்டத்தில் எதுவிதமான மாற்றமும் மேற்கொள்ளப்பட மாட்டாது. அபிவிருத்தி வீதத்தை 8,9 வீதங்களாக அதிகரிப்பதற்கு முயற்சிகளை எடுக்க வேண்டும். இதன்போது தான் அரச ஊழியர்களின் ஓய்வூதிய வாழ்க்கையை பாதுகாக்க முடியும்.
தொழிற் சங்கங்கள் மற்றும் வங்கி ஊழியர் சங்கம் முன்வைத்த யோசனைகளை ஏற்றுக்கொண்டோம். அரச ஊழியர்களின் அடிப்படை சம்பளத்துடன் ரூபா 2000 அடுத்த வருடம் இணைக்கப்படும். இது படிப்படியாக 3 கட்டங்களாக முன்னெடுக்கப்படும்.அரச ஊழியர்களின் சம்பள முரண்பாடுகளை நீக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும். இது தொடர்பான அறிக்கை தயாரிக்கும் பொறுப்பு தேசிய சம்பள ஆணைக்குழுவிடம் கையளிக்கப்படும். 6 மாதங்கள் இதற்காக அவகாசம் வழங்கப்படும்.2016 ஆம் ஆண்டு ஜனவரி தொடக்கம் ஓய்வு பெறும் அனைவருக்கும் “அக்ரஹார” காப்புறுதி கொடுப்பனவு வழங்கப்படும்.
இதுவரையில் ஸ்ரீலங்கா ரெலிகொம், தொலைத்தொடர்புகள் அமைச்சின் “மமனிதவள ஊழியர்கள்” நிரந்தர சேவைக்கு இணைத்துக் கொள்ளப்படாமல் உள்ளனர். இது தொடர்பாக கவனம் செலுத்தப்படும்.வாகன புகைப்பரிசோதனை கட்டணம், லீசிங் தொடர்பான மதிப்பீட்டு கட்டணம் மற்றும் வருமான அனுமதிப்பத்திரம் தொடர்பாகவும் தொழிற்சங்கங்களுடன் கலந்துரையாடப்பட்டது.
இவை தொடர்பில் மீளாய்வு செய்வதற்கு நாம் தயாராகவுள்ளோம். இது தொடர்பில் சம்பந்தப்பட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி இறுதித் தீர்வை பெற்றுக் கொள்ளும்வரை இடைக்கால தீர்வுகள் சிலவற்றை மேற்கொண்டோம்.இவற்றுக்கமைய வருமான அனுமதிப் பத்திரக் கட்டண அதிகரிப்பு 25 வீதத்திலிருந்து 15 வீதமாக குறைக்கப்படும்.
வாகன புகைப்பரிசோதனை கட்டணம் ரூபா 1500 வாக இடைக்கால கட்டணமாக அறவிடப்படும். லீசிங் வாகனத்திற்கான மதிப்பீட்டுக் கட்டணம் ரூபா 5000 ஆகவும் முச்சக்கரவண்டிகள், மோட்டார் சைக்கிள்களுக்கான மதிப்பீட்டுக் கட்ணம் ரூபா 3000 ஆக குறைக்கப்படும்.
வங்கிகளில் அடகு எடுக்கும் வரையறைகள் மற்றும் லீசிங் நடவடிக்கைகளிலிருந்து வங்கிகளை வெளியேற்றுதல் தொடர்பில் வங்கித் தலைவர்களுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தி பொதுவான யோசனையொன்றை முன்னெடுக்குமாறு கோரப்பட்டுள்ளது.வங்கிகளின் வருமானம் வீழ்ச்சி காணும் விதத்தில் எதுவிதமான தீர்மானமும் எடுக்கப்படமாட்டாது.
அத்தோடு வங்கிகளில் ரூபா 10 இலட்சம் மீளப் பெறும் போது நூற்றுக்கு 2 வீதம் வரி அறவிடுவது தொடர்பில் மத்திய வங்கியிடம் அறிக்கை கோரப்பட்டுள்ளது. இதற்கமைய திருத்தங்களை மேற்கொள்ளத் தயாராக இருக்கின்றோம்.
தனியார் துறை ஊழியர்களுக்கு ரூபா 2500 சம்பள உயர்வு வழங்குவதற்கான சட்ட நடவடிக்கைகள் மற்றும் 5 நாள் சேவை தொடர்பிலும் தொழிற்சங்கங்களுடன் பேசப்பட்டது.8 மணித்தியால வேலை நேரத்தை மாற்றும் எண்ணம் கிடையாது. மலையக தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பிலும் கவனம் செலுத்தப்படுகிறது.
அரச மற்றும் தனியார் துறையினருக்கு வாழ்க்கை செலவுக்கு ஏற்ற சம்பளத்தை வழங்க அடுத்த வருடம் முதல் நடவடிக்கை எடுக்கப்படும்.ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிகளின் தொழிற்சங்கங்களுடனும் பேச்சுவார்த்தைகள் நடத்தப்படும். பேச்சுவார்த்தைகள் மூலம் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொள்ள தொழிற்சங்கங்கள் மேற்கொண்ட முயற்சிகளை பாராட்டுகின்றேன்.
எனவே சம்பிரதாயபூர்வமாக அனைத்தையும் சிந்திக்காது அர்ப்பணிப்புடன் எதிர்வரும் வருடங்களில் தேவையான கொள்கைகளை தீர்மானிப்போம். அதற்கமைய செயல்படுவோம். எந்நேரமும் சிந்தித்து செயற்படுமாறு அரச, தனியார்துறை ஊழியர்களை நாம் கேட்டுக் கொள்கிறோம். ஜனவரி 8 புரட்சி பட்டது.
8 மணித்தியால வேலை நேரத்தை மாற்றும் எண்ணம் கிடையாது. மலையக தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பிலும் கவனம் செலுத்தப்படுகிறது.அரச மற்றும் தனியார் துறையினருக்கு வாழ்க்கை செலவுக்கு ஏற்ற சம்பளத்தை வழங்க அடுத்த வருடம் முதல் நடவடிக்கை எடுக்கப்படும்.
ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிகளின் தொழிற்சங்கங்களுடனும் பேச்சுவார்த்தைகள் நடத்தப்படும். பேச்சுவார்த்தைகள் மூலம் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொள்ள தொழிற்சங்கங்கள் மேற்கொண்ட முயற்சிகளை பாராட்டுகின்றேன்.
எனவே சம்பிரதாயபூர்வமாக அனைத்தையும் சிந்திக்காது அர்ப்பணிப்புடன் எதிர்வரும் வருடங்களில் தேவையான கொள்கைகளை தீர்மானிப்போம். அதற்கமைய செயல்படுவோம். எந்நேரமும் சிந்தித்து செயற்படுமாறு அரச, தனியார்துறை ஊழியர்களை நாம் கேட்டுக் கொள்கிறோம். ஜனவரி 8 புரட்சி மீள பின்னடைவு காண்பதற்கு இடமளிக்காது நாட்டு மக்களை நினைத்து தீர்மானம் எடுப்போம் என்றார்.





