அரிதாக ஏற்படும் ஈரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு பாடசாலை செல்ல முடியாது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 10 வயது சிறுமி ஒருவர், ஐபாட் கணினி மூலம் கட்டுப்படுத்தப்படும் ரோபோவொன்றை பாடசாலைக்கு அனுப்பி வகுப்பறையில் நாளாந்த பாடங்களை கற்கும் சம்பவம் அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது.
அமெரிக்க மேரிலாண்ட்டைச் சேர்ந்த பைதன் வால்டன் என்ற சிறுமியே இவ்வாறு மருத்துவமனையிலிருந்தவாறு ரோபோ மூலம் நாளாந்த பாடங்களைக் கற்று வருகிறார். பைதன் மருத்துவமனையில் இருந்தவாறு பேப்ஸ் என்ற மேற்படி ரோபோவிலுள்ள ஐபாட் கணினியை தன்னிடமுள்ள பிறிதொரு ஐபாட் கணினி மூலம் இயக்கி அந்த ரோபோவை கட்டுப்படுத்தி வருகிறார்.
அவரால் இந்த முறைமையைப் பயன்படுத்தி அந்த ரோபோவை பாடசாலையெங்கும் விரும்பியவாறு நகர்த்த முடிவது விசேட அம்சமாகும்.பைதனின் தாயாரான லைன் சேபரே தனது மகளின் கல்வி மீதான ஆர்வத்தை பூர்த்தி செய்ய இவ்வாறு ரோபோவை பாடசாலைக்கு அனுப்பும் திட்டத்தை முன்னெடுத்துள்ளார்.
இது தொடர்பில் மொன்ட்கொமெறி பூலெஸ்வில்லே ஆரம்பப் பாடசாலையின் அதிபரான டக்ளஸ் ரொபின்ஸ் விபரிக்கையில்,பைதனுக்குப் பதிலாக ரோபோவை வகுப்றையில் ஆஜராக்கும் திட்டம் குறித்து ஆரம்பத்தில் அதிர்ச்சியடைந்ததாகவும் எனினும் தற்போது அந்த ரோபோவை மாணவர்கள் பைதனாகவே கருத ஆரம்பித் துள்ளதாகவும் கூறினார்.