
சிம்பாவே அணிக்கெதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் ஷிகார் தவான் சதம் அடித்து முத்திரை பதித்தார். இந்த ஆண்டில் அவர் 3 சதம் அடித்து முன்னிலையில் உள்ளார். இதேபோல ஒருநாள் போட்டி ஓட்டங்கள் குவிப்பிலும் (637 ஓட்டங்கள்) அவர் முதலிடத்தில் உள்ளார்.
இந்நிலையில் புதிய விதிமுறைகளால் ஒருநாள் போட்டியில் ஓட்டங்களை குவிப்பது கடினம் என்று தவான் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில் ஒருநாள் போட்டியின் புதிய விதிமுறை காரணமாக இரண்டு புதிய பந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. அதாவது முதல் ஓவரில் ஒரு புதிய பந்து பயன்படுத்தப்பட்டால் அடுத்த ஓவரில் மற்றொரு பந்து பயன்படுத்தப்படுகிறது. இதனால் பந்து அதிக அளவில் சுழல் ஆகின்றன.
தற்போதுள்ள நிலையில் முதல் 10 ஓவரில் தொடக்க வீரர்களால் மிகப்பெரிய அளவில் ஓட்டங்கள் எடுக்க முடியவில்லை. மிகவும் கவனமாக விளையாட வேண்டி உள்ளது. தொடக்கத்திலேயே விக்கெட் சரிந்துவிடாமல் இருப்பதற்கு எந்த வகையான ஷொட் அடிப்பது என்பது முக்கியமானது.
சம்பியன் கிண்ண , மேற்கிந்திய தீவுகளில் நடந்த 3 நாடுகள் போட்டி ஆகியவற்றில் வெற்றி பெற்றதோடு அணி வீரர்களின் ஒற்றுமையே காரணம். இளம் வீரர்கள் அனைவரும் நல்ல உடல் தகுதியுடன் உள்ளனர். களத்தடுப்பிலும் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அனைத்து விடயங்களில் சரியான பாதையில் இருப்பதாக உணர்கிறேன்.





