
மருந்து வில்லைகள் போன்று சூட்சுமமாக தயாரிக்கப்பட்ட ஹெரோயின் வில்லைகளை விழுங்கி நாட்டுக்குள் கடத்தி வர முற்பட்ட பாகிஸ்தான் இளைஞர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலைய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
போதைப்பொருள் தடுப்புப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றுக்கமைய இவர் கைது செய்யப்பட்டதாகவும் இதற்காக வைத்தியர்களின் ஒத்துழைப்பையும் பெற்றுக்கொண்டதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சளர் உதவி பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
இதுதொடர்பில் மேலும் அறியமுடிவதாவது,
கடந்த செவ்வாயன்று இரவு 10.30 மணியளவில் பாகிஸ்தானில் இருந்து கட்டுநாயக்க ஊடாக நாட்டுக்குள் பிரவேசிக்க 22 வயதான அந்நாட்டு இளைஞர் ஒருவர் வருகை தந்துள்ளார். குறித்த இளைஞர் போதைப்பொருள் கொண்டுவருவதாக ஏற்கனவே போதைப் பொருள் தடுப்புப் பிரிவுக்கு தகவல் கிடைத்த நிலையில் பொலிஸார் உஷார் நிலையில் இருந்துள்ளனர்.
அந்த இளைஞர் விமான நிலையத்தை அடைந்ததும் அவரின் பயணப் பை முழுவதையும் தீவிர சோதனைக்கு பொலிஸார் உட்படுத்திய போதும் அதில் சந்தேகத்துக்கு இடமான எவ்வித பொருட்களும் இருக்கவில்லை.இந்நிலையில் சந்தேகநபரை விசேட சோதனைக்கு உட்படுத்திய பொலிஸார் அதிலும் சந்தேகத்துக்கிடமான எதனையும் கண்டறியவில்லை.
இந்நிலையில் குறித்த பாகிஸ்தானியரை எக்ஸ்ரே சோதனைகளுக்கு உட்படுத்த தீர்மானித்ததுடன் அதன்போது உடலில் சந்தேகத்துக்கு இடமான திரவியங்கள் இருப்பது தெரியவந்துள்ளது.இதனையடுத்து குறித்த நபரை நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதித்த பொலிஸார் அவர் விழுங்கியிருந்த ஹெரோயின் அடங்கிய 45 வில்லைகளை வெளியே வைத்தியர்களின் உதவியுடன் எடுத்துள்ளனர்.
அந்த வில்லைகளில் இருந்த ஹெரோயின் சுமார் 400 கிராம் நிறைகொண்டது என பொலிஸார் தெரிவித்தனர்.சந்தேகநபர் பொலிஸாரின் பாதுகாப்பில் நீர்கொழும்பு வைத்தியசாலையில் தொட ர்ந்து சிகிச்சை பெறும் நிலையில் மேலதிக விசாரணைகளை போதைப்பொருள் தடுப் புப் பிரிவு முன்னெடுத்துள்ளது.





