இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தில் உள்ள கிராமம் ஒன்றில் அமைந்துள்ள கோவிலில் வசித்து வந்த குரங்கு ஒன்று உயிரிழந்தமைக்காக அப்பகுதியைச் சேர்ந்த 200 ஆண்கள் தலைச் சவரம் செய்து இறுதிக் கிரியைகளை நடத்தியுள்ளனர். மேலும் 700 ஆண்கள் முகச்சவரம் செய்து இறுதிக் கிரியைகளில் பங்கேற்றுள்ளனர்.
இந்துக் கோவில் ஒன்றில் வசித்து வந்த குரங்கு, நாய்களால் துரத்தப்பட்டு அருகிலிருந்த குளத்தில் விழுந்து உயிரிழந்தது. இதனையடுத்து, கிராமத்தார் அந்தக் குரங்கிற்கு இறுதிக் கிரியைகளை நடத்தியுள்ளனர்.
இந்தியாவின் பல பகுதிகளில் உள்ள கோவில்களில் குரங்குகள் வளர்க்கப்பட்டு வருவதுடன் அதனைக் கடவுள் ஹனுமானாகப் பாவித்து வணங்கி வருகின்றனர். இந்நிலையில், தமது கோவிலில் வசித்து வந்த குரங்கு உயிரிழந்தமை தமது கிராமத்திற்கு துரதிர்ஷ்டத்தைக் கொடுக்கும் என அச்சமடைந்த கிராம மக்கள், அதற்கு இந்து முறைப்படி சடங்குகளை மேற்கொண்டு எரித்துள்ளனர்.பின்னர், அதன் சாம்பலை கங்கை ஆற்றில் கரைத்துள்ளனர். இறுதிச் சடங்குகளில் 2000 பேர் வரையில் பங்கேற்றதாகக் கூறப்படுகிறது. அத்துடன், 150,000 ரூபா செலவில் 11 நாட்கள் துக்கதின அனுசரிப்புகள் நடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.