உள்ளத்தால் ஒன்றிணைந்திருப்போம் : பத்மினி சிதம்பரநாதன்!!

660

index

தமிழ் மக்கள் சொல்ல முடியாத பல துயரங்களை பல ஆண்டுகளாக அனுபவித்துக்கொண்டு வருகின்றோம். அவ்வாறு துன்பங்களை அனுபவித்துக்கொண்டு வந்த வேளையிலே இயற்கையும் எங்களை வஞ்சித்தது.

அந்த வகையிலே சுனாமிப் பேரலை அனர்த்தத்தால் பல்லாயிரக்கணக்கில் உயிர்கள் காவு கொள்ளப்பட்டன. குறிப்பாக வடமராட்சி கிழக்கில் மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட எங்களுடைய உறவுகள் காவு கொள்ளப்பட்டார்கள். அதனால் இன்றைக்கு எத்தனையோ உறவுகளினுடைய அழுகை ஒலியை இப்போதும் கேட்டுக்கொண்டிருக்கின்றோம்.

திடீரென ஏற்பட்ட இழப்புக்களில் இருந்து மீளமுடியாமல் எமது உறவுகள் துவண்டு போயுள்ளனர். உறவுகளே இந்த கவலைகள் எங்களை வாட்டும். அதை நாங்கள் தான் ஆற்ற வேண்டிய நிலைமையில் இருக்கின்றோம். காலம் செல்ல செல்ல அந்த மன வடுக்கள் மெல்ல மெல்ல ஆறும். நீங்கள் அவ்வாறு ஆற வேண்டும். இன்றைய நிகழ்வும் உங்களுக்கு ஒரு ஆற்றுப்படுத்தலாக அமையும். அவ்வாறு ஆறினால் தான் உங்களடைய எதிர்காலத்தையும் உங்களுடைய குழந்தைகளின் எதிர்காலத்தையும் நீங்கள் கட்டியெழுப்பலாம்.

அந்த வகையிலே 2004 இல் இந்த அனர்த்தத்தைக் கேள்விப்பட்டவுடன் நாங்கள் உடனடியாக உங்களுடைய இடங்களுக்கு வந்தோம். நீங்கள் பாடசாலைகளில் சிலையாகிப் போயிருந்தீர்கள். செயலற்று இருந்தீர்கள. உங்களுடைய குழந்தைகள் அதிர்ச்சியடைந்திருந்தார்கள். நாங்கள் அவர்களை மெல்ல மெல்ல அணுகி தொடர்ச்சியாக செயற்பட்டு அவர்களில் அசைவை ஏற்படுத்தினோம்.

தங்களுடைய குழந்தைகள் மெல்ல சிரிப்பதைப் பார்த்து நாட்கணக்காக மூலைகளில் ஒதுங்கியிருந்த தாய்மார்கள் மெல்ல எழுந்து வந்து அந்த சிறுவர்களின் சத்தம் எங்கிருந்து வருகின்றது என்று பார்த்தனர். அவர்களின் உறைந்து போன முகங்களில் மாற்றம் ஏற்பட்டது. சில மாதங்களின் பின்னரும் உங்களுடைய குழந்தைகள் கடலைப் பார்த்து அச்சப்பட்டார்கள். அவர்களுடன் ஆற்றுப்படுத்தல் நிகழ்வுகளை தொடர்ந்து நடத்தினோம். பின்னர் அவர்களும் நாங்களும் சேர்ந்து கடலுக்குச் சென்று ஏலேலோ பாடி அவர்களுக்கு கடல் மீதிருந்த அச்சத்தை போக்கனோம். இவ்வாறு குழந்தைகளிடமிருந்த அச்சத்தைப் போக்கி அந்த நிகழ்வை முடித்துவைத்தோம்.

அந்த வகையில் உங்களுடைய துன்பங்களில் உங்களுடன் பங்குகொண்டிருந்தோம். பொற்பதி குடத்தனை என பாதிக்ககப்பட்ட எல்லா இடங்களிலும் இந்த ஆற்றுப்படுத்தல் நிகழ்வுகளை நிகழ்த்தியிருந்தோம். மக்களே உங்களடைய துன்பங்களில் நாங்கள் எப்போதும் உங்களுடன் இருப்போம். எங்களிடம் பெரிய வளங்கள் இல்லா விட்டாலும் அந்த உள்ளம் இருக்கின்றது. அந்த உள்ளத்தால் எப்போதும் ஒன்றிணைந்து இருப்போம்.

இன்று ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகமும் மன வடுக்களுடன் உள்ளார்கள். ஆற்றுப்படுத்தப்படாத இச்சமூகத்திலிருந்து படைப்பாற்றலை எதிர்பார்க்க முடியாது. நாம் ஒன்றுபட்டு உழைத்து மனவடுக்களிலிருந்து அவர்களை விடுவித்து தமிழ்ச் சமூகத்தை மீளக்கட்டியமைப்போம்.

 
பத்மினி சிதம்பரநாதன்
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி

1 2 3 4