5 வருடங்களை பூர்த்தி செய்த அதிபர்களுக்கும் 8 வருடங்களை பூர்த்தி செய்த ஆசிரியர்களுக்கும் இடமாற்றம்!!

502

logo_x2

“அருகில் இருக்கும் பாடசாலை சிறந்த பாடசாலை” என்ற தொனிபொருளுக்கு அமைய நாடு பூராகவும் 300 இற்கும் மேற்பட்ட பாடசாலைகள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன. அத்துடன் ஆசிரியர் பற்றாக்குறை நிறைந்த பாடசாலைகளுக்கு 2016ஆம் ஆண்டு முதல் அவற்றை நிவர்த்தி செய்வதற்காக அதிபர், ஆசரியர் இடமாற்றங்களும் இடம்பெறவுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் தெரிவத்தார். நேற்று ஹட்டனில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

நாடு பூராகவும் தற்பொழுது கடமையில் இருக்கின்ற 5 வருடங்களை பூர்த்தி செய்த அதிபர்களும், 8 வருடங்களை பூர்த்தி செய்த ஆசிரியர்களும் 2016ஆம் அண்டு முதல் இடமாற்றம் செய்யவுள்ளனர்.தற்பொழுது பாடசாலைகளில் நிலவிவரும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் முகமாகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. ஒரு சில பாடசாலைகளில் அதிகமான ஆசிரியர்களும் வேறு சில பாடசாலைகளில் குறைவான ஆசிரியர்களும் கடமையாற்றுவதால் சில பாடசாலைகள் பாதிப்புக்குள்ளாகின்றன.

அனைத்து மாணவர்களுக்கும் சமமான கல்வியை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்ற நோக்கில் சமவள பகிர்வையும், சம ஆசிரியர் பகிர்வையும் முன்நிறுத்தி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.கடந்த காலங்களில் நடைபெற்ற ஆசிரியர் இடமாற்றம் போல் அன்றி எந்தவிதமான அரசியல் தலையீடுகளும் இன்றி இந்த இடமாற்றங்கள் செய்யப்படவுள்ளன. மலையகத்திற்கு பல்கலைக்கழகம் வேண்டும் என்பது அனைவரினதும் வேண்டுக்கோளாக இருக்கும் பட்சத்தில் 2016ம் அண்டு முதல் பல்கலைக்கழகம் அமைப்பதற்கான வேலைத்திட்டங்கள் புதிய அரசாங்கத்தின் ஊடாக மேற்கொள்ளப்படும்.

சீருடை துணிகள் பெறுவதற்கு வவுச்சர் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் பெருந்தோட்ட தொழிலாளர்கள் பெரும் சிரமத்தை எதிர்கொள்வதாக நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஆறுமுகன் தொண்டமான் பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

இலங்கை முழுவதற்குமான அறிமுகமே இந்த வவுச்சர் முறை. தனியாக மலையகத்திற்கு மட்டும் மாற்றுத்திட்டங்கள் கொண்டு வர முடியாது. குறிப்பாக ஒரு சில பெற்றோர்கள் குறித்த வவுச்சர்களை வியாபார ஸ்தாபனங்களில் கொடுத்து அதற்கான பணத்தை பெற்றுகொள்ள முயற்சிக்கின்றனர்.

அதற்கு தற்போது இடமளிக்கவில்லை என்ற காரணத்தினாலேயே ஒரு சில பெற்றோர்கள் இந்த வவுச்சர் முறையை எதிர்க்கின்றனர். எனவே இந்த இலவச சீருடைகள் முழுமையாக மாணவர்களுக்கு சென்றடைய வேண்டும் என்பதினாலேயே இந்த புதிய வவுச்சர் முறை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது என்று கல்வி இராஜாங்க அமைச்சர் வே. இராதாகிருஷ்ணன் தெரிவத்தார்.