ஆரோக்கியமான நோயில்லாத வாழ்க்கைக்கு உணவுகள் மட்டுமின்றி சீரான உடற்பயிற்சி செய்வதும் அவசியம்.வீட்டில் உள்ள எல்லா வேலைகளையும் தானே செய்வதால், தனக்கு தனியாக உடற்பயிற்சி எதுவும் தேவையில்லை என்று பெரும்பாலான குடும்பத்தலைவிகள் கருதுகிறார்கள். அது தவறு, ஏனெனில் உடல் முழுவதுமான தசைகளும், எலும்புகளும் இயங்கும் விதத்தில் சீரான உடற்பயிற்சி செய்வது அவசியம்.இதற்கு காலை, மாலை வேளையில் நடைப்பயிற்சி, நீச்சல் என ஏதாவது செய்யலாம்.
குறிப்பாக நடுத்தர வயது பெண்கள் முதலில் 10 நிமிடங்கள் நடக்க வேண்டும், பின்னர் சிறிது சிறிதாக அதிகரிக்கலாம்.இதேவேளை காலை அல்லது மாலை வேளையில் உணவுக்கு முன்பாக பயிற்சியை முடித்துவிட வேண்டும். இதேபோன்று பயிற்சியை முடித்த உடன் தண்ணீர் குடிப்பதும், குளிப்பதும் சரியல்ல. கிட்டத்தட்ட அரை மணி நேரம் ஓய்வெடுத்து, உடல் சீதோஷ்ணநிலை சீரான பின்புதான் குளிக்கவேண்டும்.
மேலும் 45 வயதைக் கடந்தவர்கள் முதுகை அதிகம் வளைக்கும் யோகாசன பயிற்சிகளை செய்யாமல், மிதமான ஆசனங்களை செய்யவேண்டும். உணவுகள் சாப்பிடும் விடயத்தில் அதிக கவனமாக இருக்க வேண்டும், வறுத்த, பொரித்த உணவுகளை குறைந்த அளவில் மட்டும் சாப்பிடுங்கள். அடிக்கடி அதை சாப்பிடவும் செய்யாதீர்கள். முட்டையில் மஞ்சள் கருவை நீக்கிவிட்டு, வெள்ளைக் கருவை மட்டும் சாப்பிடுங்கள்.
நார்ச் சத்து நிறைந்த உணவுகளை சாப்பிட்டு மலச்சிக்கலை போக்குங்கள். சர்க்கரை நோயாளிகள் ஒரு நேரம் மட்டும் சாதம் சாப்பிட்டுவிட்டு, மற்ற நேரங்களில் அளவோடு சப்பாத்தி சாப்பிடவேண்டும். மீன், இறைச்சி உணவுகளை வறுத்து சாப்பிடுவதற்கு பதில் குழம்பாக வைத்து சுவைக்கலாம்.