
அமெரிக்காவில் வாலிபர் ஒருவர் வைத்திருந்த கைப்பேசியை துப்பாக்கி என தவறாக நினைத்த இரண்டு பொலிசார் சரமாரியாக சுட்டுக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரிசோனா மாகாணத்தை சேர்ந்த பொலிசார் முக்கிய குற்றவாளி ஒருவரை கடந்த சில நாட்களாக தேடி வந்துள்ளனர்.
கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு குற்றங்களில் ஈடுப்பட்டதாக கூறப்பட்ட அந்த நபரை பிடிக்க லாஸ் வேகஸ் பொலிசாரின் உதவியை நாடியுள்ளனர்.இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை அன்று புறநகர் பகுதியில் சந்தேகத்திற்குரிய நபர் ஒருவர் இருப்பதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.தகவலை பெற்ற பொலிசார் அப்பகுதிக்கு விரைந்து சென்றுள்ளனர். அப்போது ஒரு வீட்டிற்கு வெளியே வாலிபர் ஒரு கையில் ஒரு பொருளை வைத்துக்கொண்டு நின்றுள்ளார்.
வாலிபரிடம் இருப்பது துப்பாக்கி என நினைத்த பொலிசார், ‘துப்பாக்கியை கீழே போட்டுவிட்டு சரணடையவும்’ என உத்தரவிட்டுள்ளனர்.ஆனால், பொலிசாரின் உத்தரவை ஏற்காத அந்த நபர் பொலிசாரை நோக்கி நடந்து சென்றுள்ளார்.தங்களை தாக்குவதற்காக தான் துப்பாக்கி எந்தியவாரு அவர் வருகிறார் என நினைத்த 2 பொலிசார் வாலிபரை நோக்கி சரமாரியாக சுட்டுள்ளனர்.இந்த சம்பவத்தில் வாலிபர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்துள்ளார்.வாலிபரின் சடலத்திற்கு அருகே சென்று பார்த்தபோது, அவரது கையில் இருந்தது துப்பாக்கி இல்லை என்றும் அது ஒரு கைப்பேசி என பொலிசாருக்கு தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக பேசிய பொலிஸ் தலைமை அதிகாரியான Larry Hadfield, ‘துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது ஒரு குடியிருப்பு பகுதி என்பதால், ஆபத்து எதுவும் நிகழாதவாறு பொலிசார் விரைந்து செயல்பட்டுள்ளனர்.எனினும், பொலிசாரை தாக்க வருவதாக நினைத்ததால் தான் தற்காப்பிற்காக பொலிசார் வாலிபரை சுட்டுக்கொன்றுள்ளனர். எனினும், இந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளார்.





