
அமெரிக்காவில் பொதுமக்கள் துப்பாக்கி வைத்திருப்பதற்குக் கடுமையான கட்டுப்பாடுகளைக் கொண்டு வர அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா முடிவு செய்துள்ளார்.
அமெரிக்காவில் பெருகிவரும் துப்பாக்கி கலாசாரத்தால் அங்கு வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. அமெரிக்காவில் கடந்த 10 ஆண்டுகளில் ஒரு இலட்சத்துக்கும் அதிகமானோர் துப்பாக்கி சூட்டினால் பலியாகியுள்ளனர்.
இந்நிலையில், துப்பாக்கி வன்முறையை குறைப்பது தொடர்பாக ஒபாமா நாட்டு மக்களுக்கு நேற்று உரையாற்றினார். இந்த உரையின் போது ஒபாமா கண்ணீர் விட்டு அழுத சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
3 ஆண்டுகளுக்கு முன் சுட்டுக்கொல்லப்பட்ட 20 பள்ளி குழந்தைகளை நினைக்கும் போது எனக்கு பைத்தியம் பிடிப்பது போல் உள்ளது என்று ஒபாமா கூறியுள்ளார்.
தனது உரையில் பள்ளி குழந்தைகள் பற்றி பேசும் போது உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியாமல் ஒபாமா கண் கலங்கி அழுதார். பின்னர் தனது கண்ணீரை துடைத்துக் கொண்டு தொடர்ந்து பேசிய ஒபாமா,
இன்னும் சில நாள்களில், பொதுமக்கள் துப்பாக்கி வைத்திருப்பதற்கான கட்டுப்பாடுகளை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்படும்.
பல உயிர்களைக் காக்கவும், பாதுகாப்பான கைகளுக்கு மட்டுமே துப்பாகிகள் கிடைப்பதை உறுதி செய்யவும் புதிய கட்டுப்பாடுகள் உதவும்
எனவே தனது சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி நாடாளுமன்ற அனுமதியில்லாமலேயே துப்பாக்கி வைத்திருப்பதற்கு கடுமையான கட்டுப்பாடுகளை கொண்டு வர முடிவு செய்துள்ளதாக ஒபாமா தெரிவித்தார்.





