
மும்பையில் இருந்து இன்று காலை புறப்பட்ட ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் ஒட்சிசன் பற்றாக்குறை ஏற்பட்டதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.மும்பையில் இருந்து பாங்காங் வழியாக வியட்னாமின் ஹோசிமினுக்கு, இன்று காலை 9.30 மணியளவில் ஜெட் ஏர்வேஸின் போயிங் 739 ரக விமானம், 184 பயணிகளுடன் புறப்பட்டுள்ளது.
இந்நிலையில், விமானம் 32 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த போது, பாங்காங் சென்றடைய ஒரு மணி நேரம் இருந்த நிலையில், பயணிகள் மூச்சுத்திணறலுக்கு உள்ளாகியுள்ளனர்.விமானப் பணிப் பெண்கள், அவசர அவசரமாக பயணிகளுக்கு ஒட்சிசன் மாஸ்க்குகளை வழங்கியதால், பயணிகள் மூச்சுத் திணறலில் இருந்து தப்பியுள்ளனர். விமானம், மியான்மர் தலைநகர் யாங்கூன் அருகே பறந்து கொண்டிருந்த நிலையில் யாங்கூன் விமான நிலையத்தில் விமானத்தை தரையிறக்க விமானி அனுமதி கேட்டுள்ளனர்.
அங்கு தரையிறங்க அனுமதி கிடைத்ததை அடுத்து, விமானம் மதியம் தரையிறக்கப்பட்டுள்ளது.பயணிகளுக்கு தேவையான வசதிகள், யாங்கூன் விமான நிலையத்தில் செய்து தரப்பட்டுள்ளது.
பின்னர் டெல்லியில் இருந்து மற்றொரு ஜெட் ஏர்வேஸ் விமானத்தில், தொழில் நுட்ப வல்லுநர்கள் யாங்கூன் சென்று, விமானத்தில் ஏற்பட்ட தொழில் நுட்பக் கோளாறுகளை ஆராய்ந்துள்ளனர்.ஜெட் ஏர்வேஸ் அளித்துள்ள விளக்கத்தில், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஜெட் ஏர்வேஸ் விமானம் அவசரமாக யாங்கூன் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.மேலும், பயணிகள் அனைவரும் நலமுடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.





