
உத்தரபிரதேசத்தில் காதலித்து வேறு பெண்ணை திருமணம் செய்ய இருந்த காதலன் மீது காதலி ஆசிட் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேசத்தின் பிஜ்னூரை சேர்ந்தவர் அப்ரீன்(19). இவரும் ஹரித்துவாரில் பணியாற்றி வந்த அதே ஊரை சேர்ந்த சுராஜ் (22) என்பவரும் காதலித்து வந்துள்ளார்.
கல்லூரியில் படிக்கும்போதே இவர்களுக்குள் காதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.இந்நிலையில் சுராஜுக்கு வேறு பெண்ணை அவரின் பெற்றோர் நிச்சயம் செய்துள்ளனர்.இதனையடுத்து, நாம் இருவரும் வேறு மதம் என்பதால் நம் திருமணத்துக்கு கண்டிப்பாக அனுமதி கிடைக்காது.ஆகவே என்னை மறந்துவிடு என்று சுராஜ் அப்ரீனிடன் தெரிவித்துள்ளார்.
இதனால் விரக்தியடைந்த அப்ரீன் தனது காதலரைப் பழி வாங்கத் திட்டமிட்டுள்ளார்.இந்நிலையில் கடந்த ஞாயிறன்று தனது பிறந்தநாளை முன்னிட்டு சுராஜை வீட்டிற்கு வரவழைத்துள்ளார்.பின்னர் திடீரென அவர் மீது ஆசிட்டை வீசியுள்ளார். இதில் சுராஜின் முகம் மற்றும் உடல்பகுதிகளில் தீக்காயம் ஏற்பட்டது.இதனையடுத்து அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.இது தொடர்பாக சுராஜ் அளித்த புகாரின் அடிப்படையில் பொலிசார் அப்ரீனை கைது செய்தனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.





