
சுமார் 30க்கும் மேற்பட்ட சட்டவிரோத சிறுநீரக மாற்று நடவடிக்கைகள் இலங்கையில் நடத்தப்பட்டுள்ளதாக, இந்தியப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சிறுநீரகம் செயலிழந்த நோயாளர்களுக்கு டெல்லி, ஆந்திரா மற்றும் தமிழ்நாடு ஆகிய பகுதிகளில் இருந்து சட்டவிரோதமாக சிறுநீரகங்களை பெற்ற சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் தெலுங்கானாவை சேர்ந்த வைத்தியர் மற்றும் அவரது உதவியாளர்கள் உள்ளிட்ட பலரை, தெலுங்கானா குற்றப் பிரிவு அதிகாரிகள் கைதுசெய்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
அவர்கள் சட்டவிரோதமாக சிறுநீரகங்களை வழங்க முற்படுபவர்களை இலங்கைக்கு அனுப்ப, பாஸ்போட் மற்றும் சுற்றுலா விசா ஆகியவற்றை பெற்றுக் கொடுத்துள்ளதாக, கூறப்படுகின்றது. மேலும் சந்தேகநபர்கள் சுமார் 30 சட்டவிரோத சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகளை இலங்கையில் ஏற்பாடு செய்துள்ளதாகவும் குற்றம்சுமத்தப்பட்டுள்ளதாக, தெலுங்கானா குற்றப் பிரிவின் உயர் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.





