அமெரிக்கா நான்கு பெண்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்த பொலிஸ்காரர் ஒருவருக்கு 263 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அமெரிக்காவின் ஒக்லஹோமா நகரைச் சேர்ந்தவர் டேனியல் ஹோல்ட்ஸ்கிலா(29). கடந்த 2013ம் ஆண்டு அந்நகரில் பொலிஸ்காரராக பணியில் சேர்ந்த தனது பதவியைக்காட்டி, மிரட்டி, பயமுறுத்தி நான்கு பெண்களை பலவந்தப்படுத்தி பலாத்காரம் செய்ததாக இவர்மீது புகார் எழுந்தது.
இதையடுத்து, கடந்த 2015ம் ஆண்டு பணிநீக்கம் செய்யப்பட்ட டேனியலுக்கு எதிராக ஒக்லஹோமா நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது.
குறிப்பாக, வறுமை நிலையில் உள்ள இளம்பெண்கள் மற்றும் அமெரிக்க-கருப்பினத்தை சேர்ந்த பெண்கள் ஆகியோரை குறிவைத்து தனது காமவேட்டையை நடத்திய டேனியலுக்கு எதிரான வழக்கில் 13 பெண்கள் சாட்சி அளித்தனர். அவர்மீதான 36 குற்றச்சாட்டுகளில் 18 நிரூபிக்கப்பட்டன.
இதையடுத்து, இவ்வழக்கில் நேற்று தீர்ப்பளித்த நீதிபதி, டேனியல் ஹோல்ட்ஸ்கிலா-வுக்கு 263 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார்.