வயிற்றில் கல் கட்டப்பட்ட நிலையில் கிணற்றில் இருந்து சிறுவன் சடலமாக மீட்பு!!

647

baby-hand

திருகோணமலை – சம்பூர் – 07ம் வட்டாரத்தில் முழுமையாக கட்டப்படாதிருந்த கிணற்றில் இருந்து, வயிற்றில் பெரிய கல் கட்டப்பட்ட நிலையில் சிறுவன் ஒருவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சம்பவத்தில் பலியான சிறுவன் சம்பூர்-07ம் வட்டாரத்தைச் சேர்ந்த குகதாஸ் தர்சன் (வயது 06) எனத் தெரியவந்துள்ளது. 1ம் தரத்திற்கு இவ் வருடமே சேர்க்கப்பட்ட இவர், தனது சகோதரனுடனும் பக்கத்து வீட்டிலுள்ள சிறுவனுடனும் நேற்று திங்கட்கிழமை மாலை 04.00 மணியளவில் விளையாடச் சென்றுள்ளார். பின்னர் பக்கத்து வீட்டு சிறுவன் அவரது வீட்டுக்குச் சென்றுள்ளார். மேலும் உயிரிழந்த சிறுவனின் சகோதரன் கடைக்குச் சென்றுள்ளார்.

சிறிது நேரத்தின் பின் உயிரிழந்த சிறுவனின் தாய் பிள்ளையை தேடியுள்ளார். மாலை 05.30 ஆகியும் பிள்ளை வீடு வராமையால் சம்பூர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர். பின் பொலிஸாரும் பொது மக்களும் இணைந்து சிறுவனை தேடிய போது அவர் இறந்த நிலையில் கிணறு ஒன்றுக்குள் கிடந்தமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

முதலில் சிறுவன் கிணற்றுக்குள் இடறி விழுந்திருக்கலாம் என்றே சந்தேகிக்கப்பட்டது. இது சம்மந்தமாக தோப்பூர், மூதூர் பிரதேசங்களுக்கு பொறுப்பான திடிர் மரண விசாரணை அதிகாரி ஏ.ஜே.ஏ.நூறுல்லாவிடம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனை அடுத்து அங்கு வந்த அவர், ஊர்மக்களுடன் உரையாடி விட்டு இன்று செவ்வாய்கிழமை 12.10 அளவில் சுழி ஒடத் தெரிந்த ஒருவரை இறங்கி சடலத்தை எடுக்குமாறு கேட்டதிற்கிணங்க இளைஞன் ஒருவர் கிணற்றுக்குள் இறங்கி சடலத்தை எடுத்து வெளியில் கொண்டு வந்த போது எல்லோருக்கும் பேரதிர்ச்சி காத்திருந்தது.காரணம் சிறுவனின் வயிற்றில் கல் ஒன்று கட்டப்பட்டிருந்தது. சிறுவனுக்கு என்ன நடந்தது என்கின்ற விடயம் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ள நிலை இது குறித்த விசாரணைகளை சம்பூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.