வவுனியா செட்டிகுளம் மெனிக்பாம் பகுதியில் அமைந்துள்ள அருவித்தோட்டம் சிவானந்தா வித்தியாலத்தின் இன்றைய நிலைமை தொடர்பாக வவுனியா நெற் குழு நேரடியாகச் சென்று திரட்டிய தகவல்கள் உங்களுக்காக..
2005ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த பாடசாலையானது தரம் 1 தொடக்கம் தரம் 10வரை காணப்பட்டது. 10ம் தரத்திற்குப் பின்னர் செட்டிகுளம் மகாவித்தியாலயத்திற்கு சென்று கல்வி கற்க வேண்டிய நிலை மாணவர்களுக்கு காணப்பட்டது. செட்டிகுளம் மகா வித்தியாலயத்திற்கு கல்விகற்க 10 கிலோ மீற்றர் வரை செல்லவெண்டியதால் பல மாணவர்கள் தமது மேலதிகக் கல்வியை தொடர்வதில்லை. இதனை கருத்தில் கொண்டு கடந்த 2015ம் ஆண்டு க.பொ.த சாதாரணதரம் ஆரம்பிக்கப்பட்டது.
இப் பாடசாலையில் 700க்கும் மேற்ப்பட்ட மாணவர்கள் கல்வி கற்கின்ற போதும் 17 ஆசிரியர்கள் மட்டுமே கடமைபுரிகின்றனர். தரம் ஒன்றில் மாத்திரம் 65 மாணவர்கள் ஒரே வகுப்பறையில் கல்வி கற்கின்றனர். தரம் ஆறு தொடக்கம் க.பொ.த சாதாரணதரம் வரை தமிழ் ஆசிரியர்கள் காணப்படுவதில்லை, போதிய வகுப்பறைகள் காணப்படுவதில்லை, கட்டடங்கள் பழுதடைந்த நிலையில் மழைக்காலங்களில் கல்வி கற்க முடியாத நிலை காணப்படுகின்றது. தளபாடங்கள் இன்மையினால் மாணவர்கள் தரையிலிருந்து கல்வி கற்க வேண்டியுள்ளது.
இப் பாடசாலை தொடர்பாக பாடசாலையின் பிரதி அதிபர் கருத்து தெரிவிக்கையில்..
பேரூந்து குறித்த நேரத்தில் வருவதில்லை, இப் பாடசாலையில் கட்டிட வசதி இன்மையினால் தற்காலிக் கூடாரம் அமைத்து கல்வி கற்பிக்க வேண்டிய நிலையே காணப்படுகின்றது. விஞ்ஞான ஆய்வுகூடம் மற்றும் விஞ்ஞானப் பாடத்திற்கு அடிப்படையான எந்த ஒரு சின்ன கருவி கூட எமது பாடசாலையில் இல்லாத நிலை காணப்படுவதாக தெரிவித்தார்.
எமது வவுனியா நெற் குழுவினர் மேற்கொண்ட நேரடி விஜயத்தின் போது நெஞ்சை நெகிழவைக்கும் சில சம்பவங்கள் ஆசிரியர்களால் தெரிவிக்கப்பட்டது.
ஆசிரியர் ஒருவர் தெரிவிக்கையில், இக் கிராமம் மிகவும் வறுமையில் காணப்படுகின்றது. சில மாணவர்கள் பாடசாலையினால் வழங்கப்படும் மதிய உணவிக்காகவே பாடசாலைக்கு வருகை தருகின்றனர் என கவலையுடன் தெரிவித்தார்.
மேலும் சில மாணவர்கள் படிப்பதற்கு புத்தங்கங்கள் கூட இல்லாத நிலையில் ஒரே ஒரு அப்பியாசக் கொப்பியிலே தமது அனைத்து பாடங்களையும் எழுதுவதாகவும், ஒரு ஆசிரியர் பாடமெடுக்கும் போது குறிப்பெடுக்கும் மாணவர்கள் அடுத்த ஆசிரியர் பாடமெடுக்க வரும்போது அவர் திட்டுவார் எனப் பயந்து தாம் எழுதிய பேப்பர்களை கிழித்து மறைத்து வைப்பதாகவும் கவலையுடன் தெரிவித்தார்.
உரிய அதிகாரிகளே, வவுனியா பாராளுமன்ற உறுப்பினர்களே, வடமாகாண சபை உறுப்பினர்களே இப் பாடசாலைக்கு உங்களால் முடிந்த உதவியை செய்வீர்கள் என்ற நம்பிக்கையில் இச் செய்தியை உங்களுக்கு தெரியப்படுத்துகின்றோம்.
இப் பாடசாலை மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கற்றல் உபகரணங்களை வழங்க விரும்புவோர் எம்மைத் தொடர்புகொண்டால், நீங்கள் நேரடியாக உதவி செய்வதற்கான தொடர்பினை ஏற்படுத்தித்தர தயாராகவுள்ளோம்.
தொடர்புகளுக்கு வவுனியா நெற் – 0772602904






