மட்டக்களப்பு வங்கி ஒன்றில் நபர் ஒருவரின் பணப் பையை திருடிய, காங்கேசன்துறை பகுதியில் கடமையில் உள்ள பிரதான பொலிஸ் பரிசோதகர் கந்தையா ஜீவன் குமார மட்டக்களப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அம்பாறை, எரகம பிரதேசத்தைச் சேர்ந்த தாஜுதீன் ரபாய்தீன் என்பவர், தனியார் வங்கி ஒன்றில் வைத்து தனது பணப்பை காணாமல் போனதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். அதன்படி மட்டக்களப்பு சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியின் உத்தரவுக்கமைய, மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் படி குறித்த பொலிஸ் பரிசோதகர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த வங்கியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடீவி கெமரா காட்சிகளை வைத்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட பிரதான பொலிஸ் பரிசோதகர் கந்தையா ஜீவன் குமார மட்டக்களப்பு மாவட்ட நீதவான் கணேஷ ராஜா முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து பெப்ரவரி மாதம் 05ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.