
சந்திமால் தலைமையிலான இலங்கை கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுவதற்காக இந்தியா சென்றுள்ளது
இந்தியா – இலங்கை அணிகள் மோதும் முதல் 20 ஓவர் ஆட்டம் புனேயில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது.
டோனி தலைமையிலான இந்திய அணி சமீபத்தில் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று 20 ஓவர் போட்டியிலும் வெற்றிபெற்றது. இதனால் சொந்த மண்ணில் இலங்கையை வீழ்த்த முடியும் என்ற நம்பிக்கையில் உள்ளது. ஆசிய கோப்பை மற்றும் உலக கோப்பைக்கு முன்பு இந்த தொடர் நடைபெறுவதால் மிகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
அவுஸ்திரேலியாவில் கலக்கிய வீராத் கோலிக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக புதுமுக வீரர் நெகி இடம் பெற்றுள்ளார். இதே போல் ரகானே, மணீஷ் பாண்டே, புவனேஸ்வர் குமார் ஆகியோரும் அணிக்கு திரும்பி உள்ளனர். இவர்கள் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 20 ஓவர் போட்டியில் ஆடவில்லை.
ரோகித்சர்மா, பேட்டிங்கில் மிகவும் நல்ல நிலையில் உள்ளார். இதே போல் தலைவர் டோனி, ரெய்னா, யுவராஜ்சிங் போன்ற சிறந்த துடுப்பாட்ட வீரர்கள் உள்ளனர். அவுஸ்திரேலிய பயணத்தில் சிறப்பாக வீசிய ஜஸ்பிரீத் பும்ரா மீது எதிர்பார்ப்பு இருக்கிறது. அஸ்வின், நெக்ரா போன்ற சிறந்த பந்துவீச்சாளர்களும் உள்ளனர்.
இலங்கை அணியின் அதிரடி தொடக்க வீரர் டில்சான் இன்றைய ஆட்டத்தில் காயம் காரணமாக விளையாடவில்லை. எஞ்சிய போட்டியில் அவர் அணியோடு இணைகிறார். தலைவர் சந்திமால், கப்புகெதர, திசரா பெரரா போன்ற முன்னணி வீரர்கள் அணியில் உள்ளனர்.
இரு அணிகளும் கடைசியாக 2014ம் ஆண்டு உலக கோப்பை இறுதிப் போட்டியில் (டாக்கா) மோதி இருந்தது. இதில் இலங்கை 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது.
இரு அணிகளும் இன்று மோத இருப்பது 7வது போட்டியாகும். இரு அணிகளும் தலா 3 ஆட்டத்தில் வெற்றி பெற்று இருந்தது. இன்றைய ஆட்டம் இரவு 7.30 மணிக்கு நடைபெறவுள்ளது.





