
யாழ்ப்பாணம் கொட்டடி பகுதியில் பத்து வயது சிறுமியொருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயன்ற இருவரை கைது செய்துள்ளதாக யாழ் பொலிஸ் நிலைய குற்றத் தடுப்பு பிரிவு உப பொலிஸ் பரிசோதகர் எஸ்.சிறிகஜன் தெரிவித்துள்ளார்.
இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
கொட்டடி குளியாவடி பகுதியில் நேற்று முன்தினம் மாலை 6 மணியளவில் குறித்த சிறுமி புலமைப்பரிசில் பரீட்சைக்காக தனியார் கல்வி நிறுவனத்திற்கு சென்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிருக்கும் போது இருவர் சிறுமியை ஆசை வார்த்தைகள் கூறி அழைத்து தமது அறைக்கு கூட்டிச் சென்று சிறுமியை துஷ்பிரயோகம் செய்ய முயன்றுள்ளனர். இதனையடுத்து சிறுமி அச்சமடைந்து அழுதவாறு வெளியே ஒடி வர முற்பட்ட போது சிறுமிக்கு 70ரூபா பணத்தை கொடுத்து அனுப்பியுள்ளனர்.
இதன் பின்னர் அவ்விடத்திற்கு சிறுமியின் பெற்றோர் சென்று பார்த்த போது இருவரும் வீட்டினுள் மறைந்திருந்துள்ளனர். உடனடியாக பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து குறித்த நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் அல்லைப்பிட்டியில் உணவு விடுதியொன்றை நடாத்திவரும் ஜேர்மன் பிரஜாவுரிமையாளர் என்றும் மற்றையவர் ஈச்சமோட்டைப் பகுதியைச் சேர்ந்தவர் என்றும் இவர்கள் இருவரும் நிரம்பிய மது போதையில் காணப்பட்டதாகவும் குறித்த பகுதியில் தொடர்ச்சியாக வேறு பல பெண்களுடனும் சேட்டைகளில் ஈடுபட்டு வந்ததாகவும் முறைப்பாடுகள் கிடைக்கப்பட்டுள்ளதாகவும் யாழ். பொலிஸ் நிலைய குற்றத் தடுப்பு பிரிவு உப பொலிஸ் பரிசோதகர் தெரிவித்துள்ளார்.





