அதிகமாக உணவு உட்கொள்ளாத போதிலும் தனது உடல் எடை எவ்வாறு அதிகரித்துச் செல்கிறது என்பது குறித்து தீவிர யோசனையில் இருந்த பெண் ஒருவர், தான் உறக்கநிலைலேயே எழுந்துசென்று உணவு சாப்பிடுவதை வழக்கமாக கொண்டுள்ளதை உணர்ந்து அதிர்ச்சியடைந்துள்ளார்.பிரிட்டனைச் சேர்ந்த கேட் ஆர்ச்சிபால்ட் எனும் 20 வயதான இந்த பெண் ஸ்காட்லாந்தின் அபர்தீன் பல்கலைக்கழக மாணவியாவார். இப்பல்கலைக்கழகத்தில் இணைந்த ஒரு வருடகாலத்துக்குள் அவரின் எடை சடுதியாக அதிகரித்திருந்தது.
அதிக உணவு சாப்பிடாத நிலையிலும் உடல் எடை அதிகரிப்பது குறித்து அவர் வியப்படைந்திருந்தார். அதேவேளை தனது அறையிலுள்ள உணவுகள் காணாமல் போவது குறித்து தன்னுடன் விடுதியில் தங்கியுள்ள சகாக்களிடம் அவர் அடிக்கடி சண்டையிட்டார்.ஆனால், இந்த பெண்ணுக்கு உறக்கத்தில் உணவு உண்ணும் அபூர்வ நோய் உள்ளது என்பதை மருத்துவர்கள் அண்மையில் கண்டறிந்துள்ளனர். விழித்திருக்கும் நேரத்தைவிட உறக்கத்தில் இவர் அதிக உணவுகளை சாப்பிட்டு வந்துள்ளார்.
குளிர்சாதனப் பெட்டியிலுள்ள உணவுகளை மட்டுமல்லாமல் டோஸ்டரில் உணவு தயாரித்தும் சாப்பிடுவதும் தெரியவந்துள்ளது. ஒருநாள் இரவு நான்கு பேருக்கான நூடில்ஸை இவர் சாப்பிடுவாராம். ஒரே இரவில் ஒரு பெரிய கட்டி சீஸ் முழுவதையும் சாப்பிடுவது தான் இதில் மிகவும் விநோதமானது என்கிறார் கேட் ஆர்ச்சிபால்ட்.