கனடா நாட்டில் உள்ள குடியிருப்பு ஒன்றில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தை தொடர்ந்து அங்கிருந்த வளர்ப்பு நாய் ஒன்று குடும்பத்தினர் அனைவரின் உயிரையும் காப்பாற்றியுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கனடாவின் Nova Scotia மாகாணத்தில் உள்ள Alder Point என்ற பகுதியில் ஒரு பழமையான குடியிருப்பில் 2 மகள்களுடன் பெற்றோர் வசித்து வந்துள்ளனர்.
இந்த குடும்பத்தில் நீண்டகால நண்பனாக ஒரு வளர்ப்பு நாய் வசித்து வந்துள்ளது.இந்நிலையில், நேற்று அதிகாலை 4 மணியளவில் வீட்டிற்குள் இருந்த அந்த வளர்ப்பு நாய் இடைவெளி இன்றி பலமாக குரைக்க தொடங்கியுள்ளது.நாயின் சத்தத்தால் ஆழ்ந்த உறக்கத்திலிருந்த பெற்றோர் எழுந்து சென்று பார்த்தபோது, வீட்டின் முன்பகுதி தீப்பற்றி கொழுந்துவிட்டு எரிந்துக்கொண்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
உடனே அறைக்கு திரும்பிய அவர்கள் தங்களுடைய இரு மகள்களை அவசரமாக எழுப்பிக்கொண்டு வெளியேற முயற்சித்துள்ளனர்.ஆனால், வீட்டின் நுழைவு வாயில் முழுவதும் தீப்பற்றி எரிந்துக்கொண்டு இருந்ததால், அவர்களால் வாசல் வழியாக தப்பிக்க முடியவில்லை.
பின்னர், முதல் தளத்திற்கு சென்று அங்குள்ள ஜன்னல் வழியாக ஒவ்வொருவராக குதித்து உயிர் பிழைத்துள்ளனர்.இந்த விபத்து குறித்து தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு தீயை அணைப்பதற்கு முன்பாகவே, வீடு முழுவதும் எரிந்து சாம்பலாகியுள்ளது.வீட்டிலிருந்து அத்தனை உடமைகளும் எரிந்து நாசமானது.
இந்த சம்பவம் குறித்து பேசிய வீட்டின் உரிமையாளர், ‘பல அபாயகரமான சூழல்களில் தன்னுடைய முதலாளிகளை வளர்ப்பு நாய்கள் காப்பாற்றியுள்ளதை படித்துள்ளேன். ஆனால், இன்று தான் இதனை நேரில் பார்த்தேன்.
இந்த வளர்ப்பு நாய் மட்டும் சரியான நேரத்தில் எச்சரிக்கை விடுக்காமல் இருந்தால், குடும்பத்தினரை காப்பாற்றிருக்க வாய்ப்பு இல்லை’ என உருக்கத்துடன் கூறியுள்ளார்.வளர்ப்பு நாயின் உதவியால் உயிர் பிழைத்த குடும்பத்தினர் தற்போது அவர்களின் உறவினர் வீட்டில் தற்காலிகமாக தங்கி வருகின்றனர்.