
தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 68வது பிறந்தநாள் இன்று. ஜெயலலிதாவின் 68வது பிறந்தநாளை, அதிமுக தொண்டர்கள் கோலாகலமாகக் கொண்டாடி வருகின்றனர்.
இந்தக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, சென்னையில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உருவப் படத்தை தங்கள் கைகளில் பச்சை குத்திக் கொண்டனர்.
சென்னை வேளச்சேரி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான அசோக், 668 பேருக்கு பச்சை குத்தும் நிகழ்ச்சியை ஏற்பாடுசெய்திருந்தார்.
668 பேருக்கு பச்சை குத்துவதற்கென திட்டமிடப்பட்டாலும், சுமார் ஆயிரம் பேர் வரை ஜெயலலிதாவின் உருவப் படத்தை தங்கள் கைகளில் பச்சை குத்திக்கொண்டதாக நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த சட்டமன்ற உறுப்பினர் அசோக் தெரிவித்தார்.
முன்னாள் முதலமைச்சரும் நிதியமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்ட அமைச்சர்கள் இந்த நிகழ்ச்சியைத் துவக்கிவத்தனர்.
இதுதவிர தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 68வது பிறந்தநாளையொட்டி கட்சித் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் ஜெயலலிதாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் அதிமுக தொண்டர்கள் ஜெயலலிதாவின் பிறந்தநாளை கேக் வெட்டியும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.
நள்ளிரவு முதலே அதிமுகவினர் தங்களது கொண்டாட்டங்களைத் தொடங்கி விட்டனர்.





