மலையகத்தில் மீண்டும் கடும் மழை காரணமாக வெள்ளம், மண்சரிவு, போக்குவரத்து பாதிப்பு!!

311

Flood-insurance

மத்திய மலைநாட்டில் மீண்டும் கடும் மழையுடன் கூடிய காலநிலை தற்சமயம் நிலவி வருகின்றது. மழை கடுமையாக பெய்து வருவதால் வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி வட்டவளையில் 35 வீடுகள், கொட்டக்கலையில் லொக்கில், ஹெரிங்டன், மேபீல்ட், சாமஸ் ஆகிய பகுதிகளில் 48 வீடுகளில் வெள்ள நீர் உட்புகுந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும் வட்டவளை – ரொஸல்ல ரயில் நிலையத்திற்கு அருகில் பாறை ஒன்று சரிந்து வீழ்ந்து ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ஹட்டன் – கொழும்பு வீதியில் தியத்தலாவ தொடக்கம் வட்டவளைக்கு இடைப்பட்ட பகுதியில் ஆங்காங்கே மண்சரிவு ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.

கடும் மழை காரணமாக மலையகத்தின் பிரதான நீர்த்தேக்கங்களான லக்ஷபான, காசல்ரீ, கென்னியன் ஆகியவற்றின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளது.