
தங்கொடுவ பகுதியில் எரியூட்டப்பட்ட நிலையில் காணப்பட்ட வேன் ஒன்றில் இருந்து கருகிய நிலையில் ஐந்து சடலங்கள் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில், ஐவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
மாகதுர பகுதியைச் சேர்ந்த ஐவரே இவ்வாறு சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
கடந்த வௌ்ளிக்கிழமை கண்டெடுக்கப்பட்ட குறித்த சடலங்கள் தொடர்பான ஆரம்ப கட்ட விசாரணைகள் தங்கொடுவ பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட போதிலும், பின்னர் பொலிஸ் மா அதிபர் என்.கே.இளங்கக்கோனின் பணிப்புரையின்படி, மேலதிக விசாரணைகள் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டன.
இதனையடுத்து, நேற்று அப் பகுதிக்கு சென்று விசாரணைகளை ஆரம்பித்த குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் சந்தேகநபர்களையும் கைதுசெய்துள்ளனர்.
கப்பம் பெறுவதன் நிமித்தமே இந்தக் கொலைகள் இடம்பெற்றிருக்கலாம் என, ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
மேலும், எரிந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ள இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.
இதன்படி, நேவி கபில எனும் குறித்த வேனின் சாரதி அணிந்திருந்த தங்க சங்கிலி அவரது மனைவி மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளது.
இதேவேளை, நேவி கபிலவுக்கு எதிராக ஆறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், பன்னல பொலிஸில் அவருக்கு எதிராக இரண்டு பெண்கள் துஷ்பிரயோக முறைப்பாடுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்
எதுஎவ்வாறு இருப்பினும் ஏனையவர்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்பதோடு, இது தொடர்பான நடவடிக்கைகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.





