தற்கொலை செய்த ஈழ அகதியின் குடும்பத்துக்கு 25 இலட்சம் வழங்க வலியுறுத்தல்!!

571

Refugee

அண்மையில் தற்கொலை செய்து கொண்ட மதுரை உச்சப்பட்டி அகதிகள் முகாமைச் சேர்ந்த இலங்கைத் தமிழர் ரவீந்திரன் குடும்பத்துக்கு 25 இலட்சம் இந்திய ரூபாய்களை இழப்பீடு வழங்க வேண்டும் என மக்கள் சிவில் உரிமைக் கழகம் (பியூசிஎல்) வலியுறுத்தியுள்ளது.

அவரது இறப்பு தொடர்பாக மக்கள் சிவில் உரிமைக் கழகம் மற்றும் அகில இந்திய மக்கள் மேடை அமைப்பு சார்பில் உண்மை அறியும் குழு அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இக்குழு அரசுக்கு அளித்துள்ள பரிந்துரைகள் குறித்து குழுவின் அமைப்பாளர் ஆர்.முரளி செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியது: அகதிகள் முகாமில் இருப்பவர்கள் குறித்து 15 நாள்களுக்கு ஒருமுறை கணக்கெடுப்பு நடத்தப்படும். அப்போது முதியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரும் ஆஜராக வேண்டும்.

தற்கொலை செய்து கொண்ட ரவீந்திரனின் மகன் பிரதீபன் (13), ஹீமோபிலியோ நோயால் பாதிக்கப்பட்டு அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். வருவாய்த் துறையினரின் கணக்கெடுப்பின்போது மருத்துவமனையில் இருந்து பிரதீபனை அழைத்து வரஇயலவில்லை.

நிலையை எடுத்துக் கூறியும், அரசு மருத்துவர் தொலைபேசியில் பேசியும் வருவாய்த் துறையினர் ஏற்கவில்லை. அவரது பெயரை நீக்கிவிடுவோம் என வருவாய்த் துறையினர் கூறிய காரணத்தால் மனமுடைந்த ரவீந்திரன் உயர்அழுத்த மின்கம்பி ஏறி தற்கொலை செய்து கொண்டார்.

அவரது குடும்பத்துக்கு அரசு ரூ.25 இலட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். பிரதீபனுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கவும், அதற்கான செலவை அரசே ஏற்றுக் கொள்ளவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக அகதிகள் முகாமில் இலங்கைத் தமிழர்கள் வசித்து வருகின்றனர்.

அவர்களது விருப்பத்தை அறிந்து அகதி என்ற நிலையை மாற்றி இந்திய குடியுரிமை வழங்க வேண்டும். உடனடி நடவடிக்கையாக அகதிகள் முகாம் குடியிருப்புகளில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தவும், கல்வி, வேலைவாய்ப்புகளில் இருக்கும் இடர்பாடுகளைத் தவிர்க்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

-தின மணி-