128 ஏழைக் குழந்தைகளின் இருதய சத்திர சிகிச்சைக்கு உதவிய ராகவா லோரன்ஸ்!!

743

Lowrance

ராகவா லோரன்ஸ் தனது அறக்கட்டளை அமைப்பின் மூலம் பல்வேறு உதவிகளை ஓசை இல்லாமல் செய்து வருகிறார். அசோக் நகரில் உள்ள ராகவா லோரன்சின் பூர்வீக இல்லத்தை ஆதரவற்றோரின் ஆசிரமமாக மாற்றி இருக்கிறார். இங்கு 100க்கும் அதிகமானோர் தங்கி இருக்கிறார்கள்.

இவர்களுக்கு தேவையான உணவு, உடை, தங்கும் இடம் மருத்துவ உதவி அனைத்தையும் ராகவா லோரன்ஸ் வழங்குகிறார். இதுபோல பூந்தமல்லியில் ஏழை குழந்தைகள் இலவசமாக தங்கி படிக்கும் விடுதி ஒன்றை நடத்தி வருகிறார். இங்கு 150க்கும் அதிகமான குழந்தைகள் தங்கிப் படிக்கிறார்கள். இவர்களுக்கு கல்வி, சீருடை, உணவு, தங்குமிடம் அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகிறது.

இதற்கான முழு பொறுப்பையும் ராகவா லோரன்ஸ் அறக்கட்டளை ஏற்று நடத்துகிறது. இதுமட்டுமல்ல, ஏழை குழந்தைகளின் உயிர் காக்கும் சத்திர சிகிச்சைகளுக்கும் ராகவா லோரன்ஸ் உதவி வருகிறார்.

இதயக் கோளாறு உள்ள பிஞ்சு குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை செய்வதற்காக உதவி கேட்டு வருபவர்களுக்கு இலவசமாக சிகிச்சை செய்வதற்கான உதவிகளை செய்து வருகிறார். இதுவரை 127 குழந்தைகளின் இதய சிகிச்சைக்கு உதவி இருக்கிறார்.

சமீபத்தில் 3 மாத குழந்தையின் இதய சிகிச்சைக்கு உதவ வேண்டும் என்று ஒரு ஏழை தம்பதி கேட்டுக் கொண்டனர். இந்த குழந்தையின் இதய சிகிச்சைக்கு தேவையான அனைத்து உதவிகளையும் ராகவா லோரன்ஸ் செய்து இருக்கிறார். இது இவரது உதவியால் உயிர் பிழைத்த 128வது குழந்தையாகும்.

இதுபற்றி கூறிய ராகவா லோரன்ஸ், ‘‘சிறுவயதில் எனக்கும் தலையில் ஒரு பிரச்சினை இருந்தது. ‘நான் குணம் அடைந்தால் ராகவேந்திருக்கு என்னை ஒப்படைப்பதாக எனது தாயார் வேண்டிக் கொண்டார். நான் நலம் பெற்றேன். இதனால் என் பெயரை ராகவா லோரன்ஸ் என்று மாற்றிக் கொண்டேன். பிஞ்சு குழந்தைகள் இதய நோய் பாதிப்பால் வரும்போது பரிதாபமாக இருக்கிறது. அதற்கு உதவி செய்து அவர்கள் உயிர் பிழைக்கும் போது மனதுக்கு ஆறுதலாக இருக்கிறது’’ என்று தெரிவித்தார்.