கோடை காலத்தில் கூந்தல் வறட்சியை போக்கும் இயற்கை வழிகள்!!

341

making_hair_grow_faster

செம்பருத்தி இலை 1 கைப்பிடி, வேப்பந்தளிர் 5 – இரண்டையும் அரைத்து அப்படியே தலையில் தடவி 5 நிமிடங்கள் வைத்திருந்து அலசினால், வெயிலின் பாதிப்பால் மண்டைப் பகுதியில் உண்டாகிற வியர்க்குரு, அரிப்பு போன்றவை நீங்கி, கூந்தல் சுத்தமாகும்.

இதையே இன்னும் கொஞ்சம் ஸ்பெஷலாக செய்ய வேண்டும் என்பவர்கள், அரைத்த விழுதுடன் 3 டீஸ்பூன் பூந்திக்கொட்டை தூள் சேர்த்துக் கலந்து குளிக்கலாம். அது கூந்தலுக்குக் கூடுதல் பளபளப்பைத் தரும்.

* தேங்காய்ப் பால் அரை கப், பயத்த மாவு அரை கப், வெந்தயத் தூள் 2 டீஸ்பூன் முன்றையும் கரைசலாகக் கலக்கவும். அதை அப்படியே தலைக்கு ஷாம்பு போல உபயோகித்து அலசவும். வாரம் 2 அல்லது 3 முறை இப்படிச் செய்யலாம். தலைக்கு எண்ணெய் வைப்பதை விரும்பாதவர்களுக்கு ஏற்ற சிகிச்சை இது. எண்ணெய் வைக்காமலேயே எண்ணெய் வைத்த மாதிரியான தோற்றத்தைத் தரும். அதிகப் பயணம் செய்கிறவர்களுக்கும், ஏ.சி. அறையிலேயே இருப்பவர்களுக்கும் கூந்தல் சீக்கிரமே வறண்டு போகும். எண்ணெய் வைத்தால் கூந்தலில் பிசுக்கும் வியர்வையும் சேர்ந்து கொள்ளும் என்பதால் அதைத் தவிர்க்க நினைப்பார்கள். அதையும் இந்த சிகிச்சை தவிர்க்கும்.

* ஒரு டீஸ்பூன் வெந்தயம், 1 டீஸ்பூன் துவரம் பருப்பு, 2 புங்கங்காய் மூன்றையும் முதல் நாள் இரவே வெந்நீரில் ஊற வைக்கவும். மறுநாள் காலை அரைத்து பேக் மாதிரி போட்டு, 10 நிமிடங்கள் வைத்திருந்து அலசினால் கோடையின் பாதிப்புகளில் இருந்து கூந்தல் பாதுகாக்கப்படும். ஒரு இளநீரின் வழுக்கையுடன் 3 டீஸ்பூன் கடலை மாவு சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். க்ரீம் மாதிரியான இதைத் தலையில் தடவி, 10 நிமிடங்கள் வைத்திருந்து அலசவும்.

* ஓமம், மிளகு, வெந்தயம் மூன்றையும் தலா 1 டீஸ்பூன் எடுத்து ஒன்றிரண்டாகப் பொடிக்கவும். 100 மி.லி. நல்லெண்ணெயில் போட்டுக் காய்ச்சி ஆற வைத்து, வாரம் ஒரு முறை தலையில் தடவி, எண்ணெய் தேய்த்துக் குளிக்கிற மாதிரி அலசினால், உடல் சூடு தணியும். கூந்தல் பொலிவடையும்.