கலாபவன் மணி மரணத்தில் திருப்பம் : உடலில் விஷம் இருந்ததாக இரசாயன பரிசோதனை அறிக்கை!!

798

kalabhavanmani

பிரபல நடிகர் கலாபவன் மணி கடந்த வாரம் தனது பண்ணை வீட்டில் நடந்த மது விருந்தில் மயங்கி விழுந்தார். கொச்சியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர் அங்கு சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.

மேலும் அவரது உடலில் மெத்தனால் என்ற போதை அளிக்கும் இரசாயனம் இருந்தது வைத்தியர்களின் பரிசோதனையில் தெரியவந்தது.

இதனால் இதுபற்றி பொலிசாருக்கு வைத்தியசாலை நிர்வாகம் தகவல் கொடுத்தது.

லாபவன் மணியின் மரணத்திற்கு அவரது கல்லீரல் கடுமையாக பாதிக்கப்பட்டது தான் காரணம் என்று பிரேத பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்து.

அதன் அடிப்படையில் இயற்கைக்கு மாறான மரணம் என்ற பிரிவின் கீழ் பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் கலாபவன் மணியின் உடல் உள்ளுறுப்புகளின் மாதிரிகள் இரசாயன பரிசோதனைக்காக காக்கநாட்டில் உள்ள பரிசோதனை கூடத்திற்கு அனுப்பப்பட்டது.

இந்த பரிசோதனை முடிவுகள் இன்று காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதில், அவரது உடல் உள்ளுறுப்புகளில் சைக்ளோபைரிபோஸ் என்ற பூச்சிக்கொல்லி தடயங்கள் இருந்தது தெரியவந்துள்ளது.

இத்தகவல், வழக்கில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. அவரது பண்ணை வீட்டில் மது விருந்து நடந்த போது அவர் குடித்த மதுவில் விஷம் கலந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இதற்கிடையே கலாபவன் மணியின் உதவியாளர்கள் அருண், பிஜின், முருகன் ஆகியோரிடம் பொலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.