மீண்டும் வெள்ளை மாளிகைக்குள் செல்லமாட்டேன் : மிஷல் ஒபாமா!!

519

Obama

அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் பதவிக் காலம் இந்த ஆண்டுடன் முடிவடையும் நிலையில், மீண்டும் வெள்ளை மாளிகைக்குள் செல்ல மாட்டேன் என்று முதல் பெண்மணி மிஷல் ஒபாமா அறிவித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதியாக தொடர்ந்து இரண்டு தடவைக்கு (மொத்தம் 8 ஆண்டுகள்) மேல் இருக்க முடியாது என்பது விதியாகும். இரண்டாவது தடவையாக பதவியேற்ற ஜனாதிபதி ஒபாமாவின் இந்த ஆண்டுடன் ஓய்வு பெறுவதால் வெள்ளை மாளிகையிலிருந்தும் வெளியேற வேண்டும்.

கடந்த எட்டு ஆண்டுகளாக ஒபாமாவின் மனைவி மிஷல் ஒபாமா, முதல் பெண்மணியாக பல்வேறு சமூக நலப்பணித்திட்டங்களில் தன்னை ஈடுபடுத்தி வந்துள்ளார். குறிப்பாக, குழந்தைகள் நலன் மீது அதீத ஆர்வம் காட்டி வருகிறார்.

பில் கிளிண்டனின் மனைவி ஹிலாரி கிளிண்டன் வழியில், மிஷல் ஒபாமாவும் அரசியலில் ஈடுபடுவார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது. ஒபாமா போலவே, இலனாய் மாநிலத்திலிருந்து செனட்டர் பதவிக்கு முதலில் போட்டியிடுவார். தொடர்ந்து ஜனாதிபதி வேட்பாளராகவும் களம் காண்பார் என்ற பேச்சும் எழுந்த்து.

இந்நிலையில், விழா ஒன்றில் பங்கேற்ற மிஷல், தனக்கு மீண்டும் வெள்ளை மாளிகை செல்ல விருப்பமில்லை என்று திட்டவட்டமாக அறிவித்தார். கட்சி சார்ந்த அரசியல் இல்லாமல் அனைவருக்கும் பொதுவாக இருந்து சமூகப்பணி ஆற்ற விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார். குழந்தைகள் நலன் சார்ந்த பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து பணியாற்றப் போவதாகவும் கூறியுள்ளார்.

மேலும், எட்டாண்டுகளாக தனது குழந்தைகள் வெள்ளை மாளிகை வாழ்க்கையில் மிகவும் தனிமைப்பட்டு விட்டனர். இனி அவர்களுடன் அதிக நேரம் செலவிட வேண்டும் என்றார். மிஷல் ஒபாமாவின் இந்த முடிவு நிரந்தரமான ஒன்றா அல்லது குழந்தைகள் பெரியவர்களானதும் அரசியல் பக்கம் வருவாரா என்பது தற்போதைய புதிராகும்.