‘பகிடி’ வார்த்தைப் பிரயோகங்கள் தொடர்ந்தமையினால், இருவருக்கிடையில் முருகல் நிலை உருவாகி, கத்திக்குத்துவாக மாறி ஒருவர் ஸ்தலத்தில் பலியான சம்பவமொன்று, கொஸ்லந்தை நகரில் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவத்தில் பி.கே. அமரசேக்கர என்ற 45 வயது நிரம்பிய குடும்பஸ்தரே பலியானவராவார். இது குறித்து, கொஸ்லந்தை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சுனில் தயாசிரி தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட விசாரணையடுத்து, கொஸ்லந்தையைச் சேர்ந்த ஏ.சுப்ரமணியம் என்பவரைக் கைது செய்துள்ளனர்.
குறித்த சந்தேக நபரிடமிருந்து கொலைக்கு பயன்படுத்திய கத்தியும் மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொஸ்லந்தை வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரியின் விசாரணைக்கமைய, கத்தியினால் குத்தியமையினாலேயே, மரணம் சம்பவித்துள்ளமை தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இக்கொலையைத் தொடர்ந்து, கொஸ்லந்த பகுதியில் பெரும் பதட்ட நிலை தோன்றியுள்ளதாக பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மேலும், இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.