ஜப்பான் நாட்டின் ஹோன்ஷு தீவில் இன்றுகாலை ஆறு ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.
தலைநகர் டோக்கியோவில் இருந்து சுமார் 350 கிலோமீட்டர் தூரத்தில் பூமியின் அடியில் சுமார் பத்து கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் பலமாக குலுங்கின. பீதியடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலை மற்றும் வீதிகளில் தஞ்சமடைந்தனர்.
உள்ளூர் நேரப்படி காலை 11.39 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் சாலை போக்குவரத்து மற்றும் புல்லட் ரெயில் சேவைகள் சுமார் அரைமணி நேரத்துக்கு முடங்கியதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உயிர்சேதம் மற்றும் பொருட்சேதம் தொடர்பான உடனடி தகவல்கள் எதுவும் வெளியிடப்படாத நிலையில், நிலநடுக்கத்தையடுத்து சுனாமி எச்சரிக்கை ஏதும் வெளியிடப்படவில்லை.