இலங்கையில் பல்வேறு சமூகங்களும், இனக்குழுக்களும் பல நூற்றாண்டு காலமாக வாழ்ந்து வருகின்றனர். இவ்வாறான நிலையில் இடையிடையே இனக்குழுமங்களுக்கிடையில் ஏற்பட்ட நம்பிக்கையீனம், புரிந்துணர்வுயின்மை போன்றவற்றால் பல்வேறு அசம்பாவிதங்களும் இழப்புக்களும் இந்நாட்டில் ஏற்பட்டன.
இந்த நல்லாட்சி அரசாங்கத்தில் அவ்வாறான கசப்பான அநுபவங்களை நோக்கி நாட்டை இட்டுச் செல்லக் கூடாது. இனக்குழுமங்களுக்கிடையில் ஒரு ஐக்கியமான சகவாழ்வை ஏற்படுத்துவதற்கான வேலைத்திட்டங்களை இவ் அரசாங்கம் முன்னெடுத்துள்ளதோடு அதனை மேலும் பொலிவுபடுத்தி நிதர்சனமாக்கும் வழிவகைகளையும் கருத்திற்கொள்ள வேண்டும். இவ்வாறு வன்னிப் பாராளுமன்ற உறுப்பினரும் வன்னி அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவருமாகிய மு.காதர் மஸ்தான் முப்படை வீரர்களுக்கான வீடுகள் கையளிக்கும் நிகழ்வில் தெரிவித்தார்.
ஒன்றிணைந்த எங்கள் கிராமம் ‘சத்விரு சங்ஹிந்த’ எனும் மகுடத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவின் வழிகாட்டலில் தமது உயிரைத் தியாகம் செய்த முப்படை இராணுவ வீரர்களுக்கு சுமார் ஐம்பத்தியொரு வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு கையளிக்கும் நிகழ்வொன்று நேற்று வவுனியா கொக்வேலிய எனும் இடத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் இராஜாங்க பாதுகாப்பு அமைச்சர் ருவன் விஜயவர்த்தன, பாதுகாப்புச் செயலாளர் உட்பட பல்வேறு பிரதிநிதிகள் பங்குபற்றினர்.
இந்த வீடுகள் இலங்கை இராணுவத்தில் கடமை புரியும் தழிழ் யுவதிகளுக்கும், சிங்கள இராணுவ வீரர்களை திருமணமுடித்த தழிழ்க் குடும்பங்களுக்கும் இணைத்து வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்நிகழ்வில் கௌரவ விருந்தினராக பங்குபற்றி கருத்துத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் மு.காதர் மஸ்தான் அவர்கள் எமக்கு முன்னால் பல்வேறு சவால்கள் காத்திருக்கின்றன, அதில் பிரதானமான சவாலாக இருப்பது இன ஐக்கியமும் சகவாழ்வுமாகும். இவ்விடயத்தை பல திட்டங்களினூடாக சாத்தியப்படுத்துவதற்கு கௌரவ ஜனாதிபதியும், கௌரவ பிரதமரும் முன்நிற்கின்றனர். வவுனியா போன்ற மூவினங்களும் ஒன்றாக வாழும் ஒரு மாவட்டத்தில் இவ்வாறான சகவாழ்வு முன்னெடுப்பு வரவேற்கத்தக்க விடயமாகும்.
அபிவிருத்தியடைந்த நாட்டை நோக்கிய பயணத்திற்கு ஒவ்வொரு இனக்குழுமங்களினதும் கருத்துக்களும் அபிலாசைகளும் பெரிதும் மதிக்கப்பட வேண்டும். அப்போதுதான் நாட்டின் அபிவிருத்தியை உலகளவில் கொண்டுசெல்வதற்கு முடியும் என்பதை எமது அரசாங்கம் நன்றாக புரிந்துவிட்டது. எனவே பாகுபாடுகள், வேற்றுமைகள், நம்பிக்கையீனங்கள் இல்லாத ஆழமான பரஸ்பர புரிந்துணர்வை சகல இன மக்களும்புரிந்து கொள்ள வேண்டும். அதைநோக்கிய பயணத்தில் அரசாங்கம் தொடர்ந்து கரிசினை கொள்ள வேண்டும் என்றும் முக்கியத்துவப்படுத்தினார்.
-எம்.ஷபீக்-






