பாகிஸ்தானில் பயங்கர மழை, வெள்ளம் : இதுவரை 57 பேர் உயிரிழப்பு!!

252

Rain

பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியை சூறையாடிய மழை, வெள்ளத்துக்கு 57 பேர் உயிரிழந்தனர். கைபர் பக்துங்வா மாகாணம் மற்றும் பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீர் உள்ளிட்ட பகுதிகளில் கொட்டித் தீர்த்த பெருமழையால் இங்குள்ள ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்தோடியது. நேற்றிரவு கரையை கடந்த வெள்ளநீர் அருகாமையிலுள்ள ஊர்களுக்குள்ளே புகுந்தது.

இதன் விளைவாக, பல்லாயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்படிருந்த உணவு தானியங்களும், பழத்தோட்டங்களும் நாசமடைந்தன. நூற்றுக்கணக்கான வீடுகளும் சேதமடைந்தன.

வெள்ளநீரில் மூழ்கியும், நிலச்சரிவில் சிக்கியும் இங்குள்ள ஷங்லா மாவட்டத்தில் 14 பேரும், கோஹிஸ்தான் மாவட்டத்தில் 12 பேரும், ஸ்வாத் பள்ளத்தாக்கு பகுதியில் எட்டு பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷிமீர் பகுதியில் நிலச்சரிவால் வீடு இடிந்து விழுந்த விபத்தில் சிக்கி ஐந்து குழந்தைகள் உள்பட எட்டு பேர் பலியாகினர்.

பாகிஸ்தானை சீனாவுடன் இணைக்கும் கரக்கோரம் நெடுஞ்சாலை பகுதி நிலச்சரிவால் துண்டிக்கப்பட்டுள்ளது. பல சிறிய பாலங்கள் வெள்ளத்தினால் அடித்துச் செல்லப்பட்டுள்ள நிலையில் வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

வெள்ளம் பாதித்த பகுதிகளில் சிக்கித் தவிக்கும் மக்களை மீட்கும் பணியில் ராணுவத்தினரும், தேசிய பேரிடர் மேலாண்மை பணியாளர்களும் ஈடுபட்டு வருகின்றனர்.