கண்ணே என் கண்மணியே.
காதல் பெற்ற தவக்கொழுந்தே.
உயிரே உயிர் ஒளியே.
உயிரில் பூத்த பூந்தளிரே.
தத்தி நீ நடக்கையிலே
தாவி நானும் அணைத்திடனும்.
தித்திக்கும் பேச்சினிலே
பொழுதெல்லாம் மறந்திடனும்.
உன் உதட்டோர எச்சியிலே
என் கன்னம் நனைத்திடனும்.
பொக்கை வாய்ச் சிரிப்பினிலே
பொன்னூஞ்சல் ஆடிடனும்.
கண்கள் எனைப் பார்க்கையிலே
குழந்தையாய் மாறிடனும்.
பட்டு மேனி தொட்டு நானும்
கிச்சு கிச்சு மூட்டிடனும்.
குறும்புகள் குறையாமல்
நான் குழந்தையாய் மாறிடனும்.
பசி என்று அழுமுன்னே
பாலூட்ட நான் வரனும்.
நிலாச் சோறு நான் ஊட்டி
நித்தம் உன்னை ரசித்திடனும்.
குட்டிக் கதை பல கூறி
கட்டி முத்தம் பெற்றிடனும்.
ஆராரோ நான் பாட
கனவிலும் நீ சிரித்திடனும்.
குமுதினி ரமணன்
ஜேர்மன்.