தேர்தலில் ஜெயலலிதாவை எதிர்த்து களமிறங்கும் திருநங்கை!!

721

Devi

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் ஆர்.கே நகர் தொகுதியில் ஜெயலலிதாவை எதிர்த்து ஒரு திருநங்கை களம் இறங்க உள்ளார்.

சேலத்தை சேர்ந்த தேவி கடந்த 2009ல் வீடில்லாதவர்களுக்காக, தாய்மடி என்ற இல்லத்தை துவங்கியுள்ளார். அதில் தற்போது 60 க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.

கடந்த மூன்று வருடங்களாக நாம் தமிழர் கட்சியின் உறுப்பினராக இருக்கும் இவர் இந்த தேர்தலில் ஆர்.கே நகர் தொகுதியில் போட்டியிடுகிறார்.

இதுகுறித்து தேவி கூறுகையில், ஜெயலலிதா, தமிழ்நாட்டிலேயே ஒரு மிகப்பெரிய தலைவர். நான் அவரை எதிர்த்து நிற்கவில்லை, மாறாக ஆர்.கே நகர் தொகுதி மக்களுக்காக நிற்கிறேன்.

ஏழைகளின் வாழ்க்கையில் வளர்ச்சியை கொண்டுவர பாடுபட போகிறேன். கூடவே இந்த தொகுதி மக்களுக்கு சுத்தமான குடிதண்ணீர் கொடுக்கவும், நல்ல வேலைவாய்ப்பு கிடைக்க செய்யவும் பாடுபடுவேன் என பேசியுள்ளார்.

மேலும், தமிழக தேர்தலில் போட்டியிடும் முதல் திருநங்கை இவர் என்பது குறிப்பிடத்தக்கது.