வடக்கிற்கான ரயில் தடம் அமைக்கும் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அத்துடன் கிளிநொச்சி வரையான பரீட்சார்த்த ரயில் பயணம் வெற்றியளித்துள்ளது.
கிளிநொச்சி அறிவியல் நகர்வரை பரீட்சார்த்த நடவடிக்கையாக ரயில் சேவை ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டுள்ளது. நேற்று மாலை வவுனியாவிலிருந்து கிளிநொச்சி நோக்கிப் பயணித்த ரயில் அறிவியல் நகர் வரை வந்தடைந்தது.
எதிர்வரும் செப்டெம்பர் மாதம் கிளிநொச்சிக்கு உத்தியோகபூர்வமான பயணிகள் ரயில் சேவை ஆரம்பமாகும் என ரயில்வே திணைக்கள அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் மாங்குளம், கிளிநொச்சி ஆகிய இடங்களில் ஏற்கெனவே இரயில் நிலையங்கள் இருந்த இடங்களில் புதிதாக இரயில் நிலையங்கள் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன. இரயில் பாதையை நிர்மாணிக்கும் பணிகளும் துரிதமாக நடை பெறுகின்றன.