தலைவா படம் திரையிடப்படும் திரையரங்குகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!!

362

thalaivaa

சென்னை மயிலாப்பூரில் சிட்டி சென்டர் வளாகம் உள்ளது. இங்கு நவீன வசதியுடன் “ஐநாக்ஸ்” என்ற பெயரில் 4 திரையரங்குகள் உள்ளன.
வணிக வளாகம் மற்றும் சினிமா திரையரங்குகள் உள்ளதால் இந்த வளாகம் எப்போதும் பரபரப்பாக காணப்படும்.

ஐநாக்ஸ் திரையரங்கில் எதிர்வரும் 9ம் திகதி விஜய் நடித்துள்ள தலைவா படம் வெளியிடப்படுகிறது. இந்த நிலையில் தமிழ்நாடு ஒடுக்கப்பட்ட மாணவர் புரட்சிப் படை என்ற பெயரில் இந்த திரையரங்கிற்கு ஒரு கடிதம் வந்துள்ளது.

அந்த கடிதத்தில் தலைவா படத்தை திரையிட்டால் ஐநாக்ஸ் திரையரங்கில் குண்டு வெடிக்கும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இது குறித்து மயிலாப்பூர் பொலிசில் திரையரங்க முகாமையாளர் விக்னேஷ் புகார் செய்தார்.

இதையடுத்து பொலிஸ் இன்ஸ்பெக்டர் மோகன் தாஸ் தலைமையில் பொலிசார் அங்கு விரைந்து சென்று சோதனை செய்தனர். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. வெடிகுண்டு நிபுணர்களும் சோதித்து பார்த்தனர். இது தவிர தலைவா படம் திரையிடப்படும் மேலும் சில திரையரங்குகளுக்கும் வெடிகுண்டு மிரட்டல்கள் வந்து இருப்பதாக பொலிசில் புகார் செய்யப்பட்டுள்ளது.

சில திரையரங்குகளுக்கு தொலைபேசி மூலமும் சில திரையரங்குகளுக்கு காரில் வந்த சிலரும் மிரட்டல் விடுத்ததாக பொலிசில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ள 9 திரையரங்குகளுக்கும் பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தலைவா படத்துக்கு இன்று டிக்கெட் முன் பதிவு செய்வதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. வெடி குண்டு மிரட்டல் காரணமாக முன்பதிவு நடைபெறவில்லை. இதனால் டிக்கெட் முன்பதிவு செய்ய வந்த இரசிகர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினார்கள்.