தொடர்ச்சியாக 20 படங்கள் நடிக்கப்போகும் வடிவேலு..!!

398

Vadivelu

“கெப்பே விடாம 20 படம் நடிக்கப் போறேண்ணே பார்த்துக்கிட்டே இருங்க” என்று தனது நட்பு வட்டாரத்திடம் படு நம்பிக்கையோடு பேச ஆரம்பித்துள்ளாராம் வடிவேலு.

வாயால் கெட்டவர்கள் வரிசையில் முதலிடத்தில் இருப்பவர் வடிவேலு. திமுகவுக்காக பிரசாரம் செய்யப் போய் வசதியாக வாங்கிக் கட்டிக் கொண்டார். அவர் பிரசாரம் செய்த கட்சி படுதோல்வி அடைய அவர் யாரை எதிர்த்து கடுமையாக வசை பாடினாரோ அவர் எதிர்க்கட்சித் தலைவர் ஆகி விட சத்தம் போடாமல் திரையுலகினர் வடிவேலுவை ஒதுக்கி விட்டனர்.

இதனால் கடந்த பல மாதங்களாக ஒரு புதுப் படத்திலும் நடிக்காமல் நல்ல ஓய்வில் இருந்து வந்தார் வடிவேலு. இந்த நிலையில் மிக நீண்ட இடைவேளைக்குப் பிறகு மறுபடியும் நடிக்க ஆரம்பித்துள்ளார்.

இதன்படி தெனாலிராமன் படத்தில் நடித்து வரும் வடிவேலு, இதில் நிறையவே கஷ்டப்பட்டு தனது பாணி நடிப்பை கொட்டிக் கொண்டிருக்கிறாராம். எப்படியும் இந்த தீபாவளிக்குப் படத்தை திரைக்குக் கொண்டு வந்து விட வேண்டும் என்பதில் மும்முரமாக இருக்கிறாராம் அவர்.

இந்தப் படம் குறித்து தனக்கு நெருக்கமானவர்களிடம் சிலாகித்துப் பேசி வருகிறாராம். இந்தப் படம் இத்தனை நாள் பட்டினியைப் போக்கும் வகையில் சிறப்பாக, அலப்பறையாக இருக்கும் என்று சொல்லி வருகிறாராம்.

மேலும் தனது நடிப்புக்கு மாற்றாக இதுவரை எதுவும் வரவில்லை என்று கூறும் வடிவேலு தனது நகைச்சுவை பஞ்சம் இனிமேல் அகன்று விடும் என்றும் நம்பிக்கையோடு கூறுகிறார்

அத்தோடு நில்லாமல், இனிமேல் “தொடர்ச்சியாக நடிக்கப் போகிறேன். ஒரு படம் அல்ல 2 படம் அல்ல 20 படத்துல நடிக்கப் போறேண்ணே. கேப்பே விடாம தொடர்ச்சியா நடிப்பேன். ராவும் பகலுமா நடிக்கப் போறேன்” என்றும் தெம்பாக கூறி வருகிறாராம்.