அரசின் ஒத்துழைப்பின்றி தலைவா படத்தைத் தமிழகத்தில் திரையிட முடியாது என சென்னை – செங்கல்பட்டு மாவட்ட திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் அதிரடியாக அறிவித்துள்ளது.
விஜய் நடித்த தலைவா படத்தை தமிழகத்தில் 500 அரங்குகளிலும், வேறு சில நாடுகளிலும் திரையிட முடிவு செய்திருந்தனர். கேரளா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் மும்பையில் இந்தப் படம் வெளியாகிறது. நாளை மறுநாள் ரிலீஸ் என அறிவிக்கப்பட்ட நிலையில் இந்தப் படத்தைத் திரையிடுவதில் பல்வேறு சிக்கல்கள் எழுந்துள்ளன.
தலைவா இப்போது படம் வெளியாகுமா என்ற நிலை உருவாகியுள்ளது. இந்தப் படத்துக்கு தலைவா என தலைப்பு வைத்ததிலிருந்தே சிக்கல்தான். காரணம், அடுத்த முதலமைச்சர் என்ற இலக்கை முன்வைத்து விஜயும் அவர் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரும் பேசி வந்த பேச்சுகள் ஆட்சியாளர்களை மிகவும் அதிருப்திக்குள்ளாக்கியிருப்பதாகக் கூறப்படுகிறது.
படத்தின் கதையும் அரசியல் களத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுவதால் படத்துக்கு வரிவிலக்கு உள்பட எந்த சலுகையும் அரசுத் தரப்பிலிருந்து கிடைக்காத நிலை. இந்த சூழலில் படம் வரும 9ம் திகதி அதாவது நாளை உலகெங்கும் 2000 அரங்குகளில் வெளியாகும் என தயாரிப்பாளர் அறிவித்தார்.
அந்த செய்தி வெளிவந்த அடுத்த சில நிமிடங்களில் படத்தின் முன்பதிவு நிறுத்தப்பட்டது. மேலும் படத்தை வெளியிடுவதில்லை என்றும் திரையரங்கு உரிமையாளர்கள் தரப்பில் பேச ஆரம்பித்தனர். இந்த சூழலில் சென்னை – செங்கல்பட்டு மாவட்ட திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் அவசர கூட்டம் இன்று சென்னையில் கூடியது.
அரசுக்கு எதிரான படமாகக் கருதப்படும் தலைவாவை வெளியிட அரசின் ஒத்துழைப்பு திரையரங்குகளுக்குப் பாதுகாப்பு மிகவும் அவசியம். இந்த இரண்டும் உறுதி செய்யப்படாத நிலையில் தலைவா படத்தை வெளியிடுவது நல்லதல்ல என்ற உண்மை புரிந்து, தமிழகமெங்கும் படத்தை வெளியிடுவதை நிறுத்த முடிவு செய்துள்ளோம்.
அரசின் ஒத்துழைப்பும் பாதுகாப்பும் உறுதி செய்யப்பட்டால் மட்டுமே இந்தப் படத்தை திரையிடுவது குறித்து பரிசீலிப்போம், என அறிவித்துள்ளனர். இதனால் திரையுலகிலும் விஜய் ரசிகர்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.