சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய அதிசய தீர்ப்பு!!

606

High

கணவன், மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்படவில்லை என்றால், அது உலக மகா அதிசயம் என்று கருத்து தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், கீழ் நீதிமன்றம் விவாகரத்து வழங்கி பிறப்பித்த தீர்ப்பை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

சென்னையை சேர்ந்த மணி- உஷா தம்பதிக்கு (பெயர்கள் மாற்றம்) 1998ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர். கடந்த 2008ல் மனைவியிடம் இருந்து விவாகரத்து கேட்டு மணி, சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அந்த மனுவில், “தன் மனைவி தன்னை மன ரீதியாக கொடுமை செய்கிறார். தன்னுடைய குடும்பத்துக்கு பணம் கொடுக்க வேண்டும். இல்லையென்றால் தற்கொலை செய்வேன் என்று மிரட்டுகிறார்.

கடந்த 2005ம் ஆண்டு பணம் கொடுக்க மறுத்த போது, மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றார். எனவே, மன ரீதியாக கொடுமை செய்யும் மனைவியிடம் இருந்து விவாகரத்து வழங்க வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

இந்த மனுவிற்கு பதில் அளித்த உஷா, “தன் கணவர் எந்நேரமும் கோபத்தில் பேசுவார். நான் இதுநாள் வரை அமைதியாகத்தான் வாழ்ந்து வருகிறேன்.

கடந்த 2005ம் ஆண்டு வீட்டின் பல்கனியில் நின்று கொண்டிருந்த போது, கையில் வைத்திருந்த வளையல் கைதவறி கீழே விழுந்தது. அதை பிடிக்க முயற்சித்த போது கீழே விழுந்து விட்டேன். இதனால் முதுகெலும்பு பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறேன்.

கணவன் வீட்டில் இருந்த போது, என்னை யாரும் பார்க்காததால் தற்போது பெற்றோர் வீட்டில் வசிக்கிறேன். என் கணவருடன் சேர்ந்து வாழவே விரும்புகிறேன்” என்று கூறியிருந்தார்.

இந்த மனுக்களை விசாரித்த நீதிமன்றம், உஷா தற்கொலைக்கு முயன்று, ராஜாவுக்கு மனரீதியான கொடுமைகளை செய்துள்ளார். தற்போது அவர் உடல்நலம் சரியில்லை. சக்கர நாற்காலியில் நீதிமன்றத்துக்கு வந்துள்ளனர். மாற்றுத்திறனாளியாகி விட்ட அவருக்கு மாதந்தோறும் ஜீவனாம்சம் வழங்கவும் தயார் என்று மணி உத்தரவாதம் அளித்துள்ளார்.

எனவே, மனரீதியான கொடுமை செய்வதால், இவர்களது திருமணத்தை ரத்து செய்து, விவாகரத்து வழங்கப்படுகிறது’ என்று தீர்ப்பளித்தார்.

கடந்த 2011ல் அளிக்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து உஷா, சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

இந்த மனுவை விசாரித்து நீதிபதிகள் ஆர்.சுதாகர், எஸ்.வைத்தியநாதன் ஆகியோர் பிறப்பித்த உத்தரவில், ஒரு குடும்பம் என்றால், குடும்ப உறுப்பினர்களிடையே கருத்து வேறுபாடு இருக்கத்தான் செய்யும்.

கணவன், மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்படுவது வழக்கம்தான். அப்படி கணவன், மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்படவில்லை என்றால், அது உலக மகா செய்தியாகும்.

இந்த வழக்கில், கணவன், மனைவிக்கு இடையே சமரச பேச்சுவார்த்தை நடத்த பல முறை சமரச தீர்வு மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால் தீர்வு ஏற்படவில்லை.

கணவனுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்று மனைவி உறுதியாக இருக்கிறார். எங்களை பொறுத்தவரை, திருமண பந்தம் தொடர வேண்டும். முறிவு ஏற்படக்கூடாது. எனவே, இவர்களது திருமணத்தை ரத்து செய்த குடும்பநல நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்கிறோம் என்று கூறியுள்ளனர்.