வன்னிகுறாஸ் கலாச்சாரப் பேரவையின் ஒழுங்குபடுத்தலுடன் நாள் முழுவதும் காத்தவராயன் சிந்துநடை கூத்து போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மேற்படி நிகழ்வில் துணுக்காய் தமிழ் தாய் கலாமன்றம், பெரிய புளியங்குளம் சுந்தராலய கலாமன்றம், கூழாமுறிப்பு அண்ணா கலாமன்றம், முள்ளியவளை பொன்நகர் பாரதி கலாமன்றம், முள்ளியவளை பொன்நகர் இளந்தளிர் கலாமன்றம், புதுக்குடியிருப்பு சிறி முத்துமாரி கலாமன்றம் மற்றும் வேனாவில் கலைமகள் கலாமன்றம் ஆகிய 07 மன்றங்கள் கலந்து கொண்டன.
இந்நிகழ்வில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் வடமாகாண சபை பிரதி அவைத் தலைவர் அன்ரனி ஜெகநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வு இலங்கை தமிழரசுக்கட்சியின் ஆதரவுடனும், வன்னிகுறாஸ் கலாச்சாரப் பேரவையின் ஒழுங்குபடுத்தலுடனும் நடைபெற்றது.
மேலும் அங்கு கருத்து தெரிவித்த டாக்டர் சிவமோகன்..
உலகின் ஒவ்வொரு இனமும் தனது அடையாளத்தை நிலை நிறுத்த பாவிக்கும் ஆயுதம் இனத்தின் கலாச்சாரமாகும். தமிழ் நாட்டு மக்களுக்கும் இலங்கை தமிழ் மக்களுக்கும் பாலமாக அமைவது கலாச்சாரமே. பணத்தால் என்றும் விலைபேச முடியாதது எமது கலாச்சாரம்.
முள்ளிவாய்கால் முடிவின் பின் தமிழரின் அனைத்தும் அழிந்துவிட்டது என எக்காளம் இட்டது சிங்கள அரசு. இன்று எமது கையில் எஞ்சியிருப்பது எமது கல்வியறிவும் கலாச்சாரமுமே. எஞ்சியிருப்பதனை வைத்துக்கொண்டு மீண்டெழுவான் தமிழன் என்பதனை மீண்டும் ஒருமுறை நிருபித்திருக்கிறது இந்த நிகழ்வு.
தொடர்ந்து பேசிய அவர்..
அதிகார துஸ்பிரயோகம், பணமோசடிகள் செய்தவர்கள் பணமோசடிக்காரர்கள்தான். ஆட்கடத்தல் கொலைகளை தங்கள் சுயநலத்துக்காக செய்தவர்கள் சமூக விரோதிகள்தான். 2009 க்கு பின்னான காலத்தில் தமிழ் தேசியத்தினுள் உள்வாங்கப்பட்ட பின் தங்கள் பழைய வரலாறுகளை மறந்தவர்கள் மக்களை ஏமாற்றி பிழைப்பு நடாத்தப் பார்க்கிறார்கள். எமது மக்களின் மறதி நோய் அவர்களின் ஏமாற்று வேலைகளுக்கு சந்தர்ப்பமாக அமைகிறது. வாய் கூசாத அறிக்கைகள் மூலம் தங்களை தேசியவாதிகளாக காட்ட முனைகின்றனர் என்றார்.
இந்த வன்னி மண்ணை ஒரு கலாச்சார பூமியாக்குவது, அரிய வகை மரங்கள் நிறைந்த சோலையாக்குவது மட்டுமே என் இலட்சியம். அதை செய்து முடிக்க எனக்கு அரசியல் தேவையில்லை. என் வாழ் நாளில் வன்னி மண்ணில் எதை சாதிக்கலாம் என்பது மட்டுமே என் இலட்சியமாக இருக்கும்,
மருத்துவம்தான் எனது அரசியல் ஆரம்பம். நோயாளிகளாக என்னிடம் வந்த மக்களே எனது ஆதரவாளர்கள். அது முல்லை மாவட்டத்துடன் நின்று விடாமல் மன்னார், வவுனியா வரை வியாபித்திருக்கின்றது. அந்த மருத்துவத்தின் புதிய வன்னிநில பரிமாணம் உங்கள் கண்ணின் முன் எதிர்காலத்தில் பரிணமிக்கும் என்றார்.






