பெற்ற மகனை கொடூரமாக நடாத்திய தாய் தந்தையருக்கு சிறைத்தண்டனை!!

592

Hummer

பெற்ற மகனை மிகவும் கொடூரமாக நடாத்திய தாய் மற்றும் தந்தைக்கு நீதிமன்றம் சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதித்துள்ளது. நீர்கொழும்பு உயர் நீதிமன்றம் அண்மையில் இந்த தண்டனையை விதித்துள்ளது.

14 வயதான பாடசாலை மாணவர் ஒருவரை தாயும் தந்தையும் மிகவும் கொடூரமான முறையில் தாக்கி சித்திரவதைக்கு உட்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டு வழக்குத் தொடரப்பட்டிருந்தது.

சம்பவத்துடன் தொடர்புடைய பெற்றோருக்கு இரண்டு ஆண்டுகால கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு, அந்த தண்டனை பத்தாண்டுகளுக்கு ஒத்தி வைக்கப்பட்டதுடன், 5000 ரூபா அபராதம் செலுத்துமாறும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீர்கொழும்பு உயர் நீதிமன்ற நீதவான் ஜானகீ ஜயரட்ன இந்த தண்டனையை விதித்துள்ளார்.

கே.ஏ. சுதேஸ் லக்மால் என்ற தரம் 8ல் கல்வி கற்று வந்த மாணவரை பெற்றோர் கொடூரமாக தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது. 2006ம் ஆண்டு மார்ச் மாதம் 19ம் திகதி குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கொடகமுவ உடவெல வீதியைச் சேர்ந்த தம்பதியினரே இவ்வாறு தண்டிக்கப்பட்டுள்ளனர். இந்த பெற்றோர் இருவரும் கடுமையாக சட்டவிரோத மதுபானம் (கசிப்பு) அருந்தும் பழக்கத்திற்கு அடிமையாகியிருந்தனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இரவு உணவு சாப்பிட முன்னதாக சட்டவிரோத மதுபானம் வாங்கிக் கொண்டு வந்து தருமாறு தரம் 8ல் கல்வி கற்ற மாணவரை பெற்றோர் வற்புறுத்தியுள்ளனர்.

இதனை மறுத்த மாணவரின் கை கால்களை கட்டிய பெற்றோர் கம்பி ஒன்றை சூடாகி கால்களை சுட்டு, உப்பு தடவி வீட்டைச் சுற்றி இழுத்துச் சென்றுள்ளனர்.

இந்தக் காலப்பகுதியில் மாணவர் மடம்பெல்ல பாடசாலையில் தரம் 8ல் கல்வி கற்று வந்துள்ளார், மறுநாள் குறித்த மாணவர் சம்பவத்தை பாடசாலையின் அருட்சகோதரி ஒருவரிடம் கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்து வழக்குத் தொடரப்பட்டுள்ளது.