வவுனியாவில் வரலாறு காணாத வெயில் : இலங்கை வரலாற்றிலேயே அதிகளவான 38.9 செல்சியஸ் பதிவு!!

715

Vavuniya

கடந்த சில வாரங்களாக வவுனியாவில் கடும் வெயில் மக்களை வாட்டி எடுத்து வருகின்றது. மிகவும் வறட்சியான காலநிலை நிலவுவதுடன் வெயிலின் அளவு கடந்தாண்டுகளை விட அதிகமாகவே காணப்படுகின்றது.

இதனால் குழந்தைகள் முதியோர் உட்பட தொழிலின் நிமித்தம் வெளியே செல்வோரும் வெயிலின் வெப்பத்தை தாங்கமுடியாமல் கடும் சிரமங்களுக்கும் முகம்கொடுக்கின்றனர்.

நேற்று இலங்கை வரலாற்றிலேயே அதிகளவாக வவுனியாவில் 38.9 பாகை செல்சியஸ் வெப்பநிலை காணப்பட்டதாகவும், அதற்கடுத்து பொலநறுவையில் 36.9 பாகையும், குருநாகல் மற்றும் இரத்தினபுரியில் 36.2 பாகையும், பொத்துவிலில் 35.2 பாகையும் பதிவாகியுள்ளதாக காலநிலை மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.

கொழும்பின் சராசரி வெப்பநிலை 33 பாகை செல்சியஸாகப் பதிவாகியுள்ளதாகவும் இங்கு காற்றின் வேகம் மணிக்கு 16 கிலோமீற்றர்களாகக் குறைந்துள்ளமையே இதற்குக் காரணம் எனவும் கூறிய சரத் பிரேமலால்,

வசதி வாய்ப்புள்ள கொழும்பு வாசிகள் இந்தக் கோடை காலத்தை சமாளிப்பதற்காக நுவரெலியா போன்ற மலைப் பிரதேசங்களில் முற்றுகையிட்டுள்ளனர் எனவும் தெரிவித்தார்.

இந்து சமுத்திரத்தில் காற்றின் வேகம் வெகுவாகக் குறைவடைந்துள்ளமை, வானத்தில் மேகங்கள் குறைந்துள்ளமை, சூரியன் பூமிக்கு சரி நேராக சஞ்சரித்தல் போன்ற காரணங்களாலேயே இந்த அதி உஷ்ண காலநிலை தோன்றியிருப்பதாக வானிலை அவதான நிலையத்தின் பணிப்பாளர் சரத் பிரேமலால் தெரிவித்துள்ளார்.

இந்த நாட்களில் மக்கள் அதிகமாக நீர் பருகவேண்டும் எனவும், 15 நிமிடங்களுக்கு ஒரு தடவை கட்டாயம் நீர் பருக வேண்டும் என்றும் காலநிலை மத்திய நிலையம் வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.