ஒற்றைப் பனை

678


13059539_1071721552869428_1556249757_n

ஒற்றைப் பனை நீ
ஒராயிரம் கவிதை நீ.



தட்டத்தனியே தவிப்பாய்
என் கண்களில் நீரை நிறைக்கிறாய்.

மண் ஆண்ட உறவுகள்
மனம் ஆண்ட வாசனையில் நிறைகிறாய்.



முன்னோர் எழுதிய அரிச்சுவடியில் நீ.
புறாவைத் தூது அனுப்பும் கவியிலும் நீ.



என் பாட்டன் எல்லைக்குள் வேலி நீ.
அவர் போட்ட வீட்டிற்கு முகடுமாய் நீ.


வயற்காட்டில் உழுத களைப்பில்
வரப்பு மேட்டு கயிற்றுக் கட்டில் பதநீர் நீ.

ஊர் முழுவதும் கூவி அழைத்து, அந்நாள்
கூடிக்காச்சிய கூழ் சுவையிலும் நீ.


பள்ளிப் பாடமதில் நான்
கொண்டாடிய ஒடியற் கூழ் நீ.

பனம் பழமாய் பதமாய் தணலில் சுட்ட களியதில் அம்மாவின் பலகார
வாசனை அதில் நீ.

யுத்தம் சிதைத்த சிதைவுகளின்
சாட்சி அது நீயே.

மாண்டு போன உறவுகளின்
எச்சங்கள் எங்கே ?


ஒற்றைச் சொல் பேசாது
மறைந்து போன உணர்வுகளின்
வலிகள் எங்கே?

சிதைந்து போன சொந்த
மெல்லாம் எங்கே?

எரிந்து விட்ட நம் தோப்புகளின்
அடையாளம்தான் எங்கே?

கட்டிய அழ யாரும் இல்லை
ஆறுதல் கூற உன்னால் முடியவில்லை.

நீ மட்டும் சொல்லி விடாதே…
“நான் வெற்று மரம்”
“ஒற்றைப் பனை” என்று.

குமுதினி ரமணன்
ஜேர்மன்.