வவுனியாவில் பன்றிக்கு வைத்த மின்சாரத்தில் சிக்குண்டு ஒருவர் உயிரிழப்பு!!

542

Pig

வவுனியா பறநட்டாங்கல் வெள்ளையான்குளம் பகுதியில் பணிக்கர்புளியங்குளம் பகுதியைச் சேர்ந்த குடும்பஸ்தரான வில்வராசா விஜியசீலன் 29வயது கூலி தொழிலாளியானவர் நேற்று இரவு இளைஞர்களுடன் குளத்தில் மீன் பிடிப்பதற்குச் சென்றுள்ளார்.

குளத்தில் மீன் பிடித்துக் கொண்டிருக்கையில் குடிப்பதற்கு தண்ணீர் எடுப்பதாக கூறி குறித்த குடும்பஸ்தரும் அவருடன் நண்பரும் சேர்ந்து சிறிது தூரத்திலிருக்கும் வயலிலுள்ள கிணற்றில் குடிநீர் எடுப்பதற்கு சென்றபோது அக் கிணற்றைச் சுற்றி அமைக்கப்பட்ட மின்சார கம்பியில் அகப்பட்டு குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார்.

அவருடன் சென்ற அவரின் நண்பரும் அவ்விடத்தை விட்டு அவரின் உறவினருக்குத் தகவல் கொடுப்பதற்குச் சென்றுள்ளார். எனினும் அதிகாலை ஒரு மணியானதில் வயலைச்சுற்றி பன்றிக்கு மின்சாரம் அமைக்கப்பட்டிருக்கலாம் என்ற காரணத்தில் வயலில் யாரும் செல்லவில்லை.

காலையில் ஓமந்தைப் பொலிசாருக்கு முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டதையடுத்து அங்கு சென்ற பொலிசார் விசாரணையினை மேற்கொண்டதுடன் திருட்டு மின்சாரம் பெறப்பட்டு பன்றிக்கு வைத்ததாக சந்தேகத்தில் ஒருவரை கைது செய்தாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

பொலிசாரின் உதவியுடன் நகர திடீர் மரண விசாரணை அதிகாரி கே.அமிர்தலிங்கம் சம்பவ இடத்திற்குச் சென்று சடலத்தினை பார்வையிட்டதுடன் மரண விசாரணை மேற்கொண்டு சந்தேக நபரை நீதிமன்றத்தில் முற்படுத்துமாறு பொலிசாருக்கு உத்தரவிட்டுள்ளதுடன்,

மரண மருத்துவப் பரிசோதனையின் பின்னர் உறவினரிடம் சடலத்தினை ஒப்படைக்குமாறும் உத்தரவிட்டுள்ளார். மேலதிக விசாரணையினை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.