நடிகர்-நடிகைகள் தங்கள் படங்கள் திரைக்கு வரும்போது ரசிகர்கள் அளிக்கும் ஆதரவை வைத்தே வெற்றி தோல்வியை கணிக்கிறார்கள். ரசிகர்கள் ஏராளமாக தியேட்டர்களுக்கு வந்து படத்தை பார்த்து வசூலும் அதிகமாக இருந்தால் அதை வெற்றிப்படமாக கருதுகிறார்கள். வசூல் இல்லை என்றால் தோல்விப்படம் என்கிறார்கள்.
ஆனால் என்னைப் பொருத்தவரை நான் நடிக்கும் படங்கள் வெற்றி பெறுமா? தோல்வி அடையுமா? என்பதை அந்த படம் வெளியாகும் முன்பே கணித்து விடுவேன். கதையை கேட்கும்போதே படத்தின் தரத்தை தெரிந்து கொள்வேன். படம் ஓடுமா? ஓடாதா? என்பது அப்போதே எனக்கு புரிந்து விடும். ஓடக்கூடிய நல்ல கதைகளை மட்டுமே தேர்ந்து எடுத்து நடிப்பேன்.
நான் நடிக்கும் படம் தயாராகும் போதே வெற்றி பெறும் என்பது எனக்கு தெரிந்து விடும். படம் வெளிவந்த பிறகு 95 சதவீதம் நான் நினைத்தது போலத்தான் நடந்து இருக்கிறது. படத்தில் நடிக்கும் போதே இந்த படம் ஜெயிக்கும் என்ற நம்பிக்கையுடன் நடிக்க வேண்டும். அப்போதுதான் மனது உற்சாகமாக இருக்கும். பணம் வருகிறது என்பதற்காக மோசமான கதைகளில் நடிக்க கூடாது. எனக்கு இதுவரை நல்ல கதையம்சம் உள்ள படங்களாகவே அமைந்துள்ளன.
கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களாகத்தான் நடித்து இருக்கிறேன். என்னை மனதில் வைத்து கதைகளை எழுதுகிறார்கள். அருந்ததி, பாகுபலி, ருத்ரமா தேவி ஆகியவை எனக்கு முக்கிய படங்களாக அமைந்தன. தற்போது நடிக்கும் பாகுபலி இரண்டாம் பாகம் படமும், சிங்கம்-3 படமும் என் கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களாகவே உள்ளன. பாக்மதி என்ற கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் இன்னொரு படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளேன்.
இவ்வாறு அனுஷ்கா கூறினார்.