பகவான் ஸ்ரீ சத்ய சாயிபாபா மனித உருவில் அவதரித்த அவதாரம். சர்வ வல்லமை பொருந்திய பரம்பொருள் கடவுள் மனிதனாக வாழ்ந்த காலத்தில் நாழும் வாழ்ந்திருக்கின்றோம்.
இவ் அவதாரம் 24.04.2011 ஆம் ஆண்டிலிருந்து தூல சரீரத்தை விட்டு சூட்சும சரீரத்துள் பிரவேசித்தார். அதாவது வடிவம் தாங்கி வந்த பரம்பொருள் தனது வடிவத்தை விட்டு எல்லையற்ற பிரபஞ்சத்திற்குள் இரண்டறக் கலந்துள்ளார்.
இவர் பிரபஞ்சத்திற்குள் கலந்த நாளினை உலகில் எல்லா இடங்களிலுள்ள சாயி பக்தர்களினால் சாயி நிலையங்களில் நினைவு கூர்ந்து வருகின்றார்கள். அந்த வகையில் வவுனியா பகவான் ஸ்ரீ சத்ய சாயி சேவா நிலையத்திலும் ஆராதனா மகோற்சவம் சிறப்பாக இடம் பெற்றது.
அதனை முன்னிட்டு தொடர்ச்சியாக இரண்டு வாரங்கள் தாக சாந்தி சேவையும், 24.04.2016 ஆம் திகதி அன்று சாயி நிலையத்தில் இந்தியாவிலுள்ள வடிவத்தை ஒத்த ஸர்வ மத தூபி ஒன்று இலங்கையிலேயே முதல் முறையாக வவுனியா பகவான் ஸ்ரீ சத்ய சாயி சேவா நிலையத்தில் ஸ்தாபிக்கப்பட்டு இலங்கை சத்ய சாயி சேவா நிலையங்களின் மத்திய இணைப்புக் குழுவின் உப தலைவர் வி.மனோகரன் அவர்களால் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து பஜனை நிகழ்வும் மாலை விசேட பஜனையும் இடம் பெற்றது. தொடர்ந்து நேற்று (25.04.2016) ஆம் திகதி அன்று வவுனியா வலுவிழந்தோர் புணர்வாழ்வு நிலையத்தில் விசேட தேவைக்குட்பட்ட மாணவர்களுடன் பஜனையும், அவர்களுக்கான கற்றல் உபகரணங்களுக்குரிய உதவியும் வழங்கப்பட்டு பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபாவினுடைய ஆராதனா மகோற்சவம் நினைவு கூறப்பட்டது.