வவுனியாவில் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவு தினம்!!

705

May 18

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் இம்முறை முள்ளிவாய்க்கால் நினைவு தினம் வவுனியாவில் அனுஸ்டிக்கப்படவுள்ளதாக வட மாகாண சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம் தெரிவித்தார். இன்று வவுனியா தாயக அலுவலகத்தில் வைத்தே குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை இம்முறை அனைத்து மக்களையும் திரட்டி உளப்பூர்வமாக அனுஸ்டிப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளவுள்ளதுடன் இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏனைய கட்சிகளுடனும் கலந்துரையாடப்பட்டு சிறப்பான முறையில் ஏற்பாடு செய்யப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

வவுனியா கலை மகள் விளையாட்டு மைதானத்தில் மே 18ம் திகதி மாலை 4 மணிக்கு அனுஷ்டிக்கப்படவுள்ளதுடன் அன்று காலை 6 மணி தொடக்கம் 8 மணி வரையான காலப்பகுதிக்குள் வவுனியா மாவட்டத்தில் உள்ள அனைத்து மதத் தலங்களிலும் யுத்தத்தில் இறந்த அனைத்து மக்களுக்காகவும் விசேட பிரார்த்தனைகளை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு கோரப்பட்டுள்ளது.

மேலும் பொது அமைப்புகள் மற்றும் ஏனைய கட்சிகளும் முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தில் கலந்து யுத்தத்தில் இறந்த அனைவருக்காகவும் பிரார்த்தனையில் ஈடுபட கலைமகள் விளையாட்டு மைதானத்திற்கு வருமாறும் அழைக்கப்பட்டுள்ளனர்.