பணம் அறவிடாது மேதின கொண்டாட்டங்களுக்காக பஸ்கள் வழங்கப்படமாட்டாது!!

606

CTB BUS

பணம் அறவிடாது மேதின கொண்டாட்டங்களுக்காக பஸ்கள் வழங்கப்படமாட்டாதென இலங்கை போக்குவரத்து சபை அறிவித்துள்ளது.

மேதினக் கொண்டாட்டங்களை ஏற்பாடு செய்கின்ற பிரதான கட்சிகளிடமிருந்து குறிப்பிடத்தக்க எண்ணிக்கையான பஸ்கள் கோரப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் பிரதி பொது முகாமையாளர் ராஜா குணதிலக்க குறிப்பிட்டார்.

மேதினத்தை முன்னிட்டு சபைக்கு சொந்தமான பஸ்களில் 40 வீதமானவற்றை ஒதுக்கியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

கோரப்பட்டுள்ள பஸ்களுக்கான பணத்தை முழுமையாக செலுத்திய பின்னரே மேதின கூட்டங்களுக்காக அந்தந்த கட்சிகளுக்கு அவற்றை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என அனைத்து பஸ் டிப்போக்களுக்கும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக பிரதி பொது முகாமையாளர் கூறினார்.

மே தினமான முதலாம் திகதி பொது விடுமுறை என்பதால் பயணிகளுக்கு பெரும்பாலும் அசௌகரியங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவாகவே காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

எவ்வாறாயினும், இலங்கை போக்குவரத்து சபையின் பஸ் சாரதிகள் மற்றும் நடத்துனர்களின் விடுமுறைகள் எதிர்வரும் 3 ஆம் திகதிவரை இரத்து செய்யப்பட்டுள்ளது.

பயணிகளின் நன்மை கருத்தி இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் பிரதி பொது முகாமையாளர் மேலும் தெரிவித்தார்.