வவுனியா பிரதேச செயகத்தின் ஏற்பாட்டில் வதிவோர் தகவல் முறைமை இலத்திரனியல் படுத்தப்பட்ட முதல்தர சேவையினை வடக்கு மாகாணத்தில் இன்று (29.04.2016) வவுனியா கள்ளிக்குளம் கிராம அலுவலகத்தில் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் எம்.பி றோகன புஸ்பகுமார அவர்களினால் உத்தியோகபூர்வமாக வெளியீடு செய்து வைக்கப்பட்டது.
ஜக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் நிதி ஒதுக்கீட்டில் வவுனியா கள்ளிக்குளம் கிராமசேவையாளர் பிரிவிலுள்ள 156 குடும்பங்களுக்கு முதல் கட்டமாக வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
குடும்ப விபரங்களை தாங்கிய வதிவோர் தகவல் முறைமை வடக்கு மாகாணத்தில் முதற்தடவையாக வவுனியா மாவட்டத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தற்போது நடைமுறையிலுள்ள குடும்ப அட்டையினை இலத்திரனியல்படுத்தப்பட்டு அதில் குடும்ப உறுப்பினர்கள் விபரங்கள் இலத்திரனியல் மயப்படுத்தப்பட்டு தேடல்களுக்கான பயணம் 1 எனும் நிகழ்ச்சித்திட்டத்தில் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.
அனைத்து கிராம சேவையாளர்களின் பிரிவிலுள்ள பொது மக்களின் விபரங்களைத் திரட்டி கனணியில் உள்ளடக்கி இலகுவான சேவையினை வழங்குவதே இதன் நோக்கம் என்றும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதன் ஒரு கட்டமே இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கிராமசேவையாளர் பிரிவிலும் இதன் நடைமுறை உருவாக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
இந்நிகழ்வில் வவுனியா பிரதேச செயலாளர் கா.உதயராசா, வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை செயலாளர் திருமதி.சுகந்தி கிஷோர், மேலதிக பிரதேச செயலாளர், திட்டப்பணிப்பாளர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகதர், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், கிராம சேவையாளர்கள், கள்ளிக்குளம் பிரிவு பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டதுடன் அரசாங்க அதிபரினால் பொது மக்களுக்கு வதிவோர் தகவல் முறைமை இலத்திரனியல் மயப்படுத்தப்பட்ட குடியியல் தரவுதளத்தின் வெளியீடும் வழங்கி வைக்கப்பட்டது.






